பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும், வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ஒன்றிணைந்து போட்டியிட்ட மகா கூட்டணி 35 தொகுதிளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், ஆர்ஜேடி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஐ(எம்எல்) 2 தொகுதிகளிலும், சிபிஎம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன.
இவ்விரு கூட்டணிகளிலும் இல்லாத அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
கட்சிகள் பெற்ற வாக்குகள்: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியில் சென்றமுறை முதலிடத்தில் இருந்த ஆர்ஜேடி இம்முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. எனினும், வாக்கு சதவீதத்தில் அது முதலிடம் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆர்ஜேடி 23% வாக்குகளைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடம் பிடித்துள்ள பாஜக 20.08% வாக்குகளையும் மூன்றாம் இடம் பிடித்துள்ள ஜேடியு 19.25% வாக்குகளையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 8.71% வாக்குகளையும், சிராஜ் பாஸ்வான் கட்சி 4.97% வாக்குகளையும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 1.85% வாக்குகளையும் பெற்றுள்ளன.