லைகா – விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று அமர்வில் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஜெயச்சந்திரன், மாற்று அமர்வில் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் மும்மினேனி சுதிர்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்துள்ளதாகவும், சில கருத்துக் களை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை மாற்று அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.