பிஹாரில் நவ.20 புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு – முதல்வர் யார்?

பாட்னா: பிஹாரில் புதிய அரசு நவம்பர் 20 ஆம் தேதி பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்க உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, “புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் பதவியேற்புக்கு மீண்டும் வருவேன்.” என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள அமைச்சரவையை கலைப்பதற்காக, நிதிஷ் குமார் இன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் தனது ராஜினாமாவை ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் சமர்ப்பிப்பார். அதன்பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து அடுத்த முதல்வர் மற்றும் அமைச்சரவை குறித்த முடிவுகளை எடுக்கும். இதனை தொடர்ந்து புதிய அரசு அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்படும்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைப் பெற்று, மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்றது. பாஜக அதிகபட்சமாக 89 இடங்களைப் பெற்றது, அதைத் தொடர்ந்து ஜேடியு 85 இடங்களைப் பெற்றது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி 19 இடங்களை வென்றது. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 இடங்களையும் மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் வென்றன. ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி 35 இடங்களை மட்டுமே வென்றது.

பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருந்த ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா நேற்று நிதிஷ் குமாரைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர், “சில நாட்களில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும். சரியான நேரத்தில் நீங்கள் விவரங்களை அறிந்து கொள்வீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிக்கையில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.” என்று கூறினார்.

2020 தேர்தலில் 50-க்கும் குறைவான எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்ததால் குறைவான அமைச்சர்களை பெற்ற ஐக்கிய ஜனதா தளம், இம்முறை அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்டுள்ளது. இதற்கிடையில், எல்ஜேபி கட்சி புதிய அரசாங்கத்தில் சேர ஆவலுடன் இருப்பதாக சிராக் பாஸ்வான் கூறினார். அதே நேரத்தில் எல்ஜேபி துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளும் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.