2வது டெஸ்ட் போட்டியில் கில் இடத்தில் யார்? கவுதம் கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!

கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட கழுத்து பிடிப்பு காயம், அணி நிர்வாகத்திற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வலியால் அவர் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்ய வராத நிலையில், 124 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்த முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது. நவம்பர் 22 ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Add Zee News as a Preferred Source

காயத்தின் தீவிரம் மற்றும் மாற்று வீரர்கள்

வெளியான ஒரு சிறிய காணொளியில், ஷுப்மன் கில் கழுத்தில் பிரேஸ் அணிந்திருப்பதும், சரியாக நடக்க முடியாமல் சிரமப்படுவதும் தெரிகிறது. இது அவரது காயம் தீவிரமாக இருக்கலாம் என்ற யூகங்களை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை கில் இரண்டாவது டெஸ்டில் விளையாட முடியாமல் போனால், அவருக்கு பதிலாக அணியில் யார் சேர்க்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இடத்திற்கு இரண்டு இளம் இடது கை பேட்ஸ்மேன்களான சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சாய் சுதர்சன் vs தேவ்தத் படிக்கல்

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால், தேவ்தத் படிக்கல் சற்று முன்னணியில் இருக்கிறார். அவர் 49 முதல் தர போட்டிகளில் விளையாடி, 41 என்ற சராசரியுடன் 3199 ரன்கள் எடுத்துள்ளார். மறுபுறம், சாய் சுதர்சன் 38 போட்டிகளில் 39 சராசரியுடன் 2562 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், சர்வதேச டெஸ்ட் அனுபவத்தில் சாய் சுதர்சன், படிக்கல்லை விட முன்னிலையில் உள்ளார்; அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கொல்கத்தா டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தென்னாப்பிரிக்காவின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மரை எதிர்கொள்வதில் இருவரின் திறமையும் முக்கியமாக கவனிக்கப்படும். வலது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சாய் சுதர்சன் 5 இன்னிங்ஸ்களில் இரண்டு முறை ஆட்டமிழந்து, 23 என்ற சராசரியை கொண்டுள்ளார். படிக்கல், 2 இன்னிங்ஸ்களில் ஒருமுறை ஆட்டமிழந்துள்ளார். இந்த தரவுகள் குறைவாக இருப்பதால், இதன் அடிப்படையில் ஒரு தெளிவான முடிவுக்கு வருவது கடினம்.

யாருக்கு அதிக வாய்ப்பு?

புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருந்தாலும், அணி நிர்வாகம் சாய் சுதர்சன் மீது காட்டும் நம்பிக்கை அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் சாய் சுதர்சனுக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளித்தது. எனவே, ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரராக களமிறங்கும் வாய்ப்பு சாய் சுதர்சனுக்கே பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால், இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.