ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கடந்த ஞாயிறு (நவ. 16) அன்று நடந்த கவர்னர்ஸ் விருதுகள் விழாவில் தனது முதல் ஆஸ்கரைப் பெற்றுள்ளார்.
அவருடன் நடன இயக்குநர் மற்றும் நடிகர் டெபி ஆலன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் வின் தாமஸ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். விருதாளர்கள் கொண்டாட்டமாக நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.
டாம் குரூஸ் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள சாகச நடிகர். இவரது படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை நிஜமாக சுயமாக செய்வதற்கு பெயர்பெற்றவர்.
இவரது மிஷின் இம்பாஸிபல், டாப் கன் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றிபெற்றவை. இவர் ஐஸ் வைட் ஷட், கொலாட்டரல், மங்கோலியா போன்ற விமர்சன ரீதியில் வெற்றிபெற்ற படங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருதைக் கொடுத்திருக்கிறது அகாடமி.
புகழ்பெற்ற மெக்சிகன் இயக்குநர் இன்னாரிட்டு ( Alejandro González Iñárritu) கையினால் விருதைப் பெற்றார் டாம் குரூஸ். தற்போது இவர்கள் இருவரும் புதிய படத்தில் ஒன்றாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜுடி என அழைக்கப்படும் அந்த படம் 2026ம் ஆண்டு வெளியாகும். டாம் குரூஸ் தான் இன்னாரிட்டுவின் ‘Amores Perros’ படத்தின் மிகப் பெரிய ரசிகன் எனக் கூறியுள்ளார்.
At tonight’s 16th Governors Awards, the Academy is proud to honor four cinematic visionaries whose artistry has defined generations and continues to shape the future of film.
• Debbie Allen
• Tom Cruise
• Wynn Thomas
• Dolly PartonDebbie Allen, Tom Cruise, and Wynn… pic.twitter.com/pqjLheINsU
— The Academy (@TheAcademy) November 16, 2025
Tom Cruise பேச்சு
மேலும் அவர், “சினிமா எனக்கு தொழில் அல்ல, அதுதான் நான்” என உணர்ச்சிவசமாகப் பேசியுள்ளார். தனது பேச்சில் சிறுவயதில் திரைப்படம் பார்த்த அனுபவம் தன்னை எப்படித் தூண்டியது என்றும், திரைத்துறையின் எதிர்காலம் குறித்தும் பேசியுள்ளார். தனது படங்களில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“சினிமா என்னை உலகம் முழுவதும் அழைத்துச் செல்கிறது. மனிதர்களுக்கு இடையிலான வேறுபாடுகளைப் பாராட்டவும் மதிக்கவும் இது எனக்கு உதவுகிறது. நாம் அனைவரும் பகிரும் மனிதத்தன்மையையும், பல விதங்களில் நாம் எவ்வளவு ஒரே மாதிரியானவர்கள் என்பதையும் இது எனக்குக் காட்டுகிறது. நாம் எங்கிருந்து வந்தாலும், அந்த திரையரங்கில், நாம் ஒன்றாகச் சிரிக்கிறோம், ஒன்றாக உணர்கிறோம், ஒன்றாக நம்பிக்கை கொள்கிறோம் – அதுதான் இந்தக் கலை வடிவத்தின் சக்தி. அதனால்தான் இது முக்கியமானது. எனவே சினிமா எனக்கு தொழில் அல்ல, அதுதான் நான்” எனப் பேசியுள்ளார்.