புதுடெல்லி: பிஹாரின் 243 தொகுதிகளில் எவரும் எதிர்பார்க்காத வகையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி 35 மட்டுமே பெற்றுள்ளது. இக்கூட்டணியின் வாக்குகளைப் பிரித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணியின் பெரும்பான்மையான வாக்குகளை பிரித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதியில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. 98 சதவீத வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
அக்கட்சி 3.4 % வாக்குகளை பெற்றது. ஒரு தொகுதியில் இரண்டாவது, 129 -ல் மூன்றாவது,73 -ல் நான்காவது இடமும் கிடைத்துள்ளது. இவற்றில் 33 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருந்துள்ளன. இந்த வித்தியாசத்தை விட அதிக வாக்குகளை ஜன் சுராஜ் வேட்பாளர்கள் பெற்றனர். இது மெகா கூட்டணிக்கான வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதுபோல், பிஎஸ்பி பிஹாரின் 181 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்வென்றது. ஒரு தொகுதியில் 2-ம் இடம் பிடித்தது. 20 தொகுதிகளில் பிஎஸ்பிக்கு கிடைத்த வாக்குகள், வெற்றிக்கான வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. இந்த 20 -ல் என்டிஏ 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, பிஎஸ்பியின் 90% வாக்குகள் என்டிஏவிற்கே வெற்றியை தேடித் தந்துள்ளன.
பிஹாரில் சுமார் 20% முஸ்லிம்களின் வாக்குகளில் ஒரு பெரும் பகுதியை ஏஐஎம்ஐஎம் தட்டிச் சென்று விட்டது. இக்கட்சிக்கு 9 தொகுதிகளில் அதன் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமான வாக்குகள் கிடைத்தன. இதனால், அந்த தொகுதிகளின் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் என்டிஏவிற்கு கிடைத்தன. மெகா கூட்டணிக்கு சுமார் 30% வாக்குகள் இழப்பாகின. கடந்த 2020 தேர்தலில் பெற்ற அதே 5 தொகுதிகளை ஏஐஎம்ஐஎம் பெற்றுள்ளது.
ஒவைசியின் போட்டியால், என்டிஏவின் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான மெகா கூட்டணியின் வாக்குகள் மூன்று பக்கங்களிலும் சிதறிடிக்கப்பட்டுள்ளன. பிஹாரின் தலித் சமூக வாக்குகளை பிஎஸ்பியும், ஏஐஎம்ஐஎம் முஸ்லிம் வாக்குகளையும் மெகா கூட்டணியிடமிருந்து பறித்துள்ளன.
ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த், பிஹாரின் இளம் வாக்காளர்களை மெகா கூட்டணிக்கு செல்லாமல் தடுத்துள்ளார். இந்தநிலையால், என்டிஏவிற்கு சாதக
மான தொகுதிகளில் மெகா கூட்டணியால் நுழைய முடியவில்லை. எனவே, இந்தமுறை பிஹார் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆளும் என்டிஏவின் பெண்களுக்கான அறிவிப்புகளுடன் மூன்று கட்சிகளால் பிரிந்த வாக்குகளும் மெகா கூட்டணியின் மெகா தோல்வியாக மாறிவிட்டது.