சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, நேற்று காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர். 92 வயதான அவரது மறைவு குறித்தும், கோபாலி தன்னை உருவாக்கிய விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

”அப்பா (கோபாலி) இறந்த செய்தி கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்கு உடனடியாக போய் பார்த்துட்டேன். அவர் உயிரோடு இருந்தவரையில் அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் அமெரிக்காவில் இருக்கறதால, உடனடியாக வர முடியலை. அதனால அப்பாவோட அக்கா வைஷ்ணவி, தான் முழுமையாக உடனிருந்து கவனிச்சாங்க.
கோபாலி சார் ரொம்பவே எளிமையாவர். பிரதிபலன் பாராமல் பலருக்கும் உதவிகள் செய்து வந்தவர். விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாதவர். தான் செய்ததை சரியாக, நேர்த்தியாக செய்யணும்னு விரும்பினார். சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன், நரேன் இப்படி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரையும் அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தூர்தர்ஷனில் பொறுப்பில் இருந்தவரை வேணு அரவிந்த் உள்பட பல நடிகர், நடிகளை உருவாக்கினார். அதானால் தான் நேற்று பலரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அவரைப் பத்தி நிறைய சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அவரிடம் என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார்னு சொல்லியிருந்தேன் அல்லவா. அவங்க நடிகர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் சாரோட சொந்த சகோதரி. எனக்கு அதிகமாக சாப்பாடு கொடுத்த கை அவங்க கை தான்.

நான் ‘மெட்டி ஒலி’ நடிச்ச அன்னிக்கு எங்க அப்பா, அம்மாகிட்ட போய், ‘நான் நடிகனாகிட்டேன்’னு சொல்லி சந்தோஷமானேன். ஆனா, அவங்களுக்கு எதுவும் புரியல. ஆனா, கோபாலி அப்பாகிட்ட சொன்னதும், உண்மையான சந்தோஷத்தை அனுபவிச்சார். நான் நடிக்கும்போது பல் தெரியற மாதிரி ஓவரா பண்றேனோனு ஒரு சந்தேகம் வருது.. வாயை ரொம்பவும் திறந்துடுறேன்.. இப்படி நடிப்பு குறித்த எனது டவுட்களை எல்லாம் அவர்கிட்ட சொல்வேன். பொறுமையாகக் கேட்டு, தீர்வுகளை சொல்லி திருத்தியிருக்கார். எனது உடல்மொழியிலும் ஒரு இறுக்கம் இருந்தது. அதையும் அவர் தான் தளர்த்தினார். அவருடைய மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வரைக்குமே அவரிடம் நடிப்பு பயிற்சிக்கான வகுப்புகளுக்கு போயிட்டு இருந்தேன். அவர்கிட்ட கத்துக்க இன்னமும் நிறைய இருக்கு. அவரை அடிக்கடி நான் பார்க்க போறது மாதிரி, ‘சித்திரம் பேசுதடி’ நரேனும் வருவார். திடீரென ரஜினி சார் வந்து, நாள் முழுவதும் அவருடன் இருந்து பேசிட்டு போவார்.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ஒரு சம்பவம். அந்தப் படத்தில் ரஜினி சாரோடு நடிக்கும் போது அவர்கிட்ட நான் கோபாலி சார் ஸ்டூடன்ட்னு சொன்னேன். ரஜினி சார் நெகிழ்ந்து என்னைக் கட்டி அணைத்து ‘அப்படியா.. ‘என கேட்டு ஆச்சரியப்பட்டார். ‘அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நல்ல மனுஷன்’னு எமோஷனலாக சொன்னதோடு கே.பாலசந்தர் சார்கிட்ட இவர் எப்படி கூட்டிட்டுப் போய் அறிமுகம் செய்து வைத்தார் என்ற கதையை என்கிட்ட சொன்னார். இதுவெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத கதை.
கே.பி.சாரும், கோபாலி சாரும் நெருங்கிய நண்பர்கள். கோபாலி சார் ரஜினி சாருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கறதுக்காக பாலசந்தர் சாரை பார்க்க போயிருந்தார். கே.பி.சார் ஆபிஸில் ஆடிஷன் நடந்துக்கிட்டு இருந்ததால கோபாலி சார் வெளியே ரொம்ப நேரம் காத்திருந்திருக்கார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, நேரடியாக கே.பி.சார் அறைக்கே சென்று, ‘நான் தங்கம் மாதிரி ஒரு பையனை அழைச்சிட்டு வந்திருக்கேன். செமையா டான்ஸ் ஆடுவான். ஃபைட் பண்ணுவான்.. அதைச் செய்வான். இதைச் செய்வான்’ ரஜினி சாரை பத்தி உண்மை, பொய்னு என்னென்னா வெல்லாமோ கலந்துகட்டி சொல்லிட்டே இருந்திருக்கார். அதன் பிறகு கே.பி. சார் இவர் இவ்ளோ சொல்றாரேன்னு ரஜினி முகத்தை பார்த்திருக்கார்.

கோபாலி சார் இவ்வளவு தூரம் சொன்னபிறகே, ரஜினி சாருக்கு சான்ஸ் கொடுத்தார் கே.பி.சார். இந்த விஷயத்தை ரஜினி சார் என்கிட்ட சொல்லிட்டு, ‘ஒருத்தர் மனசுக்குள்ள இன்னொருத்தர் பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கற மனிதரை நாம என்னவென்று சொல்வது. நான் எதிர்காலத்தில் எப்படி இருப்பேன். என்ன ஆவேன்னு இப்படி எதுவும் கோபாலி சாருக்குத் தெரியாது. ஆனா, அவர் எனக்காக பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது, இப்பவும் மனசுல நிழலாடுது. தன்னோட ஸ்டூடன்ட் பெரிய ஆளாகிடணும்னு அவ்வளவு பொய்கள் சொல்லித்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அவரை என் வாழ்க்கையில் என்னைக்கும் மறக்க மாட்டேன்’னு நெகிழ்ந்து சொன்னார் ரஜினி சார். அதைப் போல கோபாலி சாரோட மறைவுக்கு அவர் வந்து எல்லோர்கிட்டேயும் வந்து ஆறுதல் சொன்னார்.” என உருக்கமாகப் பேசினார் போஸ் வெங்கட்.