மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் – ஆளும் கூட்டணியிலும் பஞ்சாயத்து?

மகாராஷ்டிராவில் வரும் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடியாகவே சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இருவரும் பல முறை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய ராஜ் தாக்கரே வீட்டிற்கு உத்தவ் தாக்கரே மீண்டும் சென்றார்.

உத்தவ் தாக்கரே மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்றார். அங்கு இரு தலைவர்களும் பூட்டிய அறைக்குள் இரண்டு மணி நேரம் வார்டுகளை பங்கிட்டுக்கொள்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். உத்தவ் தாக்கரே கட்சிக்கு செல்வாக்கு இருக்கும் பகுதியில் ராஜ் தாக்கரே சில வார்டுகளை கறாராக கேட்கிறார்.

இதனால் வார்டுகளை பகிர்ந்து கொள்வதில் இரு தரப்பினருக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை இருந்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் பொதுவான கோட்டைகளான கருதப்படும் சிவ்ரி, ஒர்லி, மாகிம், பாண்டூப், தீண்தோஷி, மகதானே, பைகுல்லா மற்றும் காட்கோபர் போன்றவை இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே வார்டுகளை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் இருந்து வருவதாக இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

முக்கிய ஆலோசனை

இப்பகுதியில் தற்போது உத்தவ் தாக்கரே கட்சிக்கு கவுன்சிலர்கள் இருக்கின்றனர். தற்போது தேர்தலுக்கான வார்டு இட ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு வார்டு வாரியாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். உத்தவ் தாக்கரேயுடன் பேச்சுவார்த்தையில் அவரது உறவினர் வருண் சர்தேசாய் கலந்து கொண்டார்.

ராஜ் தாக்கரேயுடன் அவரது கட்சி நிர்வாகிகள் பாலா நந்த்காவ்கர் மற்றும் நிதின் சர்தேசாய் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு தாக்கரே சகோதரர்கள் தனியாக சந்தித்து இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ராஜ் தாக்கரே

தீவிரம் காட்டும் உத்தவ் தாக்கரே

மொத்தமுள்ள 227 வார்டுகளில் ராஜ் தாக்கரே தங்களுக்கு 80 முதல் 90 வார்டுகள் வேண்டும் என்று கேட்கிறார். இது பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் இத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் இணைந்து எதிர்க்கட்சி கூட்டணியில் போட்டியிட்டால் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையை விரைவில் முடித்துவிட்டால் வேட்பாளர்களை இறுதி செய்ய வசதியாக இருக்கும் என்று கருதி உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கிறார். எப்படியும் மும்பை மாநகராட்சி தனது கையில் இருந்து சென்றுவிடக்கூடாது என்பதில் உத்தவ் தாக்கரே தீவிரமாக இருக்கிறார்.

ஆளும் கூட்டணியில் பஞ்சாயத்து

ஆளும் பா.ஜ.க கூட்டணியிலும் வார்டு பங்கீடு மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் சில நகராட்சிகளில் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் அக்கட்சிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பதும், ஒரு கட்சி தலைவர்களை மற்ற கட்சி இழுப்பதுமாக இருக்கிறது. இந்த பஞ்சாயத்து டெல்லி வரை சென்றது. ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்தார். ஆனாலும் தலைவர்களை இழுப்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.