திருப்பதி,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சத்யராஜ், கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். திருப்பதி அருகே திருச்சானூர், தாமினேடு, இந்திரம்மா காலனியை சேர்ந்தவர் நாயகி. இவருடைய மகன் மனிஷ் (வயது 3). நாயகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக மகனுடன் வசித்து வந்தார்.
நாயகி குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது சத்யராஜுக்கும், நாயகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்யராஜ், மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து நாயகி வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் நாயகியின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு நாயகியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து திருச்சானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது நாயகி அவரது மகன் மனிஷ் ஆகியோர் தரையில் இறந்து கிடந்தனர். சத்யராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். 3 பேரின் உடல்களும் எலும்புகூடாக காணப்பட்டது. அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மனிஷ் ஆகிய இருவரையும் சத்யராஜ் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.