IND vs SA 3rd ODI: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 6) விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றதை தொடர்ந்து, தொடரை தீர்மானிக்கும் போட்டியாக 3வது போட்டி அமைந்துள்ளது.
Add Zee News as a Preferred Source
IND vs SA 3rd ODI: தொடரை வெல்லுமா இந்தியா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய பின்னரும், ரோஹித் சர்மா கேப்டன்ஸியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் இந்தியா ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை. ஒரு தொடரை மட்டும்தான் இழந்திருக்கிறது என்றாலும், ஒருவேளை நாளைய போட்டியை இழந்தால் அது இரண்டாவது தொடராக அமையும்.
IND vs SA 3rd ODI: மூன்று முக்கிய விஷயங்கள்
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, பலம்வாய்ந்த டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவை வெல்ல தீவிரம் காட்டும். இரு போட்டிகளிலும் இந்தியா முதல் பேட்டிங் செய்தது. முதல் போட்டியில் 349 ரன்களை குவித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2வது போட்டியிலும் 358 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. இந்தியா தொடரை வெல்ல வேண்டுமெனில் இந்த மூன்று பிரச்னைகளை தீர்வது முக்கியம். அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
IND vs SA 3rd ODI: ஓபனிங் பிரச்னை
சுப்மான் கில் இல்லாத காரணத்தால் ரோஹித் சர்மா உடன் இடதுகை பேட்டர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓபனிங்கில் களமிறங்குகிறார். டாப் ஆர்டரில் இவர்தான் ஒரே இடதுகை பேட்டரும் ஆவார். ஓடிஐ அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க, இடது கை பேட்டர் இல்லையே என பலமுறை இந்திய ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் புலம்பித் தள்ளியிருப்பார்கள். ஆனால், இங்கு நேர்மாறாக இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து சரணடைந்து வருகிறார் இடது கை பேட்டர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
முதல் போட்டியில் நாந்த்ரே பர்கரிடமும், 2வது போட்டியில் யான்சனிடமும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ஜெய்ஸ்வால். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் 4 இன்னிங்ஸில் மூன்று மார்கோ யான்சனால் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் இவர் 30க்கும் மேற்பட்ட முறை இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் ஆட்டமிழந்ததாக புள்ளிவிவரங்கள் கூறப்படுகிறது. எனவே எந்த இடத்தில் தவறு என்பதை கண்டுபிடித்து ஜெய்ஸ்வால் உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும். சுப்மான் கில் உடற்தகுதி பெற்று வந்துவிட்டால் அடுத்து வரும் நியூசிலாந்து தொடரில் மட்டுமில்லை, 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கூட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ருதுராஜ் கெய்க்வாட் மறுபுறம் சதம் விளாசிவிட்டார்.
IND vs SA 3rd ODI: பிளேயிங் லெவன் பிரச்னை
இந்திய பிளேயிங் லெவனில் நாளைய போட்டியில் முக்கிய மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தருக்கு பதில் நிதிஷ்குமார் ரெட்டி கொண்டுவரப்படுவார் என கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இல்லாமல், பேட்டிங் ஆல்-ரவுண்டராக பயன்படுத்தப்படுகிறார். கடந்த போட்டியில் 4 ஓவர்களையும், முந்தைய போட்டியில் 3 ஓவர்களையும் மட்டுமே வாஷிங்டன் வீசினார். பேட்டிங்கிலும் அவர் பெரிய பங்களிப்பை அளிப்பது இள்லை.
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு பதில் பவர் ஹிட்டராக அறியப்படும் நிதிஷ் குமார் ரெட்டியை இந்திய பிளேயிங் லெவனில் எடுக்கலாம். நம்பர் 5இல் கேஎல் ராகுல், நம்பர் 6இல் நிதிஷ் குமாரை களமிறக்கலாம். இதனால் கடந்த இரண்டு போட்டிகளிலும் கிடைக்காத சரியான பினிஷிங் இப்போது கிடைக்கலாம். இரண்டு போட்டிகளிலும் இந்தியா கூடுதலாக 30 ரன்களை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஜடேஜாவின் நிதான ஆட்டமும், வாஷிங்டன் சுந்தரின் அனுபவமின்மையை அதை தடுத்துவிட்டது. எனவே, பவர் ஹிட்டிங் திறன் கொண்டவர் நம்பர் 6இல் விளையாட வேண்டும். ஹர்திக் பாண்டியா அடுத்து அணிக்கு திரும்பியதும் அவர்தான் நம்பர் 6 வீரராக வரப்போகிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
IND vs SA 3rd ODI: டாஸ் பிரச்னை
கடந்த 20 ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக டாஸ் தோற்றுள்ளது. இந்திய அணி கடைசியாக 2023 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்றிருந்தது. அதற்கு பிறகு, 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இருந்து தற்போது வரை டாஸ் ஜெயிக்கவே இல்லை. ரோஹித் சர்மா, சுப்மான் கில், கேஎல் ராகுல் என மூன்று கேப்டன்கள் மாறியும் நிலைமை மட்டும் மாறவில்லை.
முதலிரண்டு போட்டிகளை போலவே விசாகப்பட்டினம் மைதானத்திலும் இரவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருக்கும். இது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு பெரும் சாதகமாக அமையும். ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக மாறும், பந்து அதிகம் ஈரமாவதால் பந்துவீச்சாளர்களுக்கும் பந்தை பிடிப்பதில் அசௌகரியம் இருக்கும். இந்தச் சூழலில், நாளை டாஸ் வெல்லும் அணியே தொடரையும் வெல்லும் என்பதால் இந்திய அணி எப்படியாவது டாஸை வெல்ல வேண்டும்.
மேலும் படிக்க | விராட் கோலி 100 சதங்களை எட்ட வாய்ப்பிருக்கா? இன்னும் எத்தனை போட்டிகள் விளையாடுவார்? முழு விவரம்!
மேலும் படிக்க | நீக்கப்படும் கம்பீரின் செல்லப்பிள்ளை… உள்ளே வரும் ரிஷப் பண்ட் – இந்திய அணியில் வரும் மாற்றம்!
மேலும் படிக்க | ருதுராஜ் சதத்தால் இந்திய அணியில் இடம் உறுதி – ஆனால் இந்த 3 வீரர்களுக்கு ஆபத்து…!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More