இஸ்லமபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெஹ்ரிக் -இ -இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பிரதமராக பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதவிர மேலும் பல வழக்குகள் இம்ரான் கான் மீது தொடுக்கப்பட்டன. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து, அவர் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இருவருக்கும் தலா ரூ.1.64 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் வயது முதிர்வை கருத்தில் கொண்டும் புஷ்ரா பீபி ஒரு பெண் என்பதையும் கருத்தில் கொண்டு இருவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ரும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.