முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் இருவரும் 80 வயதை தொட்டிருப்பதையடுத்து, அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இன்று சென்னையில் மதிய விருந்தளிக்கப் பட்டது.
ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் இருவருக்குமே தற்போது 79 முடிந்து 80 வது வயது தொடங்குகிறது.
இதையொட்டி இவர்களது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் இதை செலிபிரேட் செய்யும்விதமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள் சிலருக்கு மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இன்று மதியம் நிகழ்ந்த இந்த விருந்து விழாவுக்கு ப.சியின் குடும்பத்தினர், அவரது சகோதரி குடும்பம் மற்றும் நெருங்கிய செட்டி நாட்டுச் சொந்தங்கள் கலந்து கொண்டனர்.
தவிர நடிகர்கள் சிவக்குமார், கவிஞர வைரமுத்து, வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பிரபலங்களும் வருகை தந்தனர்.

வந்த அனைவரையும் ப.சி மற்றும் அவரது மனைவி இருவரும் வரவேற்க, விருந்து உபசரிப்பை கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஆகியோர் கவனித்தனர். பிறகு விதவிதமான சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன
வந்த அத்தனை பேரும் தம்பதியை வாழ்த்தி விட்டு விருந்து உண்டுவிட்டுச் சென்றனர்.
நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் வந்து வாழ்த்தினால் அப்பா அம்மா இருவருக்கும் அந்த நினைவுகள் காலத்துக்கும் மறக்காது என்றே இந்த விருந்து ஏற்பாட்டை கார்த்தி சிதம்பரம் செய்ததாகக் கூறுகின்றனர்.