விருதுநகர்: அறுவடை காலத்தில் தொடரும் அவதி; அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.

சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இன்னும் வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அறுவடைக்குத் தயாரான நெல்
அறுவடைக்குத் தயாரான நெல்

நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்காததால், தனியாருக்குக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவான விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை அறுவடை காலத்திலும் தாங்கள் இதுபோன்ற இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், முன்கூட்டியே அதிகாரிகள் அரசு கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடைக்குத் தயாரான நெல்
அறுவடைக்குத் தயாரான நெல்

மேலும், வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தரமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு அறுவடை காலத்திலும் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுவதால், நிரந்தரத் தீர்வாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

அரசு விரைவில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.