Yash Dayal : ஐபிஎல் 2026 தொடருக்கான பிளேயர்கள் ஏலம் எல்லாம் முடிந்து 10 ஐபிஎல் அணிகளும் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆர்சிபி அணிக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில், முன்ஜாமீன் கேட்டு யாஷ் தயாள் மனு அளித்திருந்த நிலையில், அந்த மனு இப்போது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை உருவாகியிருப்பதால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவதும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பொறுத்தே இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Add Zee News as a Preferred Source
போக்சோ (POCSO) வழக்கு மற்றும் கைதாகும் அபாயம்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் யஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாழ்க்கையில் வழிகாட்டுதல் வழங்குவதாகக் கூறி, ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தச் செயல்கள் நீடித்ததாகவும், ஐபிஎல் 2025 சமயத்திலும் இச்சம்பவங்கள் நடந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு நிராகரிப்பு:
இந்த வழக்கில் ஜாமீன் கோரி யஷ் தயாள் தாக்கல் செய்த மனுவை ராஜஸ்தான் போக்சோ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
முந்தைய வழக்குகள்:
ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமண வாக்குறுதி அளித்து 5 ஆண்டுகளாகப் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆனால், தற்போது மைனர் சிறுமி சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கு அவரை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
RCB அணியின் நிலை:
யாஷ் தயாளின் இந்த சட்டப் போராட்டங்களால் அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சீசனில் ஆர்சிபி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தயாள். அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரைத் தேட வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி நிர்வாகம் உள்ளது. இத்தகைய புகார்கள் இருப்பதை அறிந்தும் ஆர்சிபி அவரை அணியில் தக்க வைத்தது குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், மைனர் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை புகார் யஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கையை மிகப்பெரிய முட்டுக்கட்டைக்கு உள்ளாக்கியுள்ளது. நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நகர்வுகளே யாஷ் தயாளின் கிரிக்கெட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More