திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அனில். இவர் கடந்த 29.11.2025 அன்று 12 வயது பள்ளி மாணவனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவன், இதுபற்றி தனது நண்பனிடம் கூறியுள்ளான். அவன் தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது. இதுகுறித்து 12 வயது பள்ளி மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மலம்புழா போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அனில், பள்ளி மாணவனுக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசில் புகார் அளிக்காமல் தாமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம், புகார் அளிக்க தாமதம் செய்யவில்லை. பள்ளி மாணவனின் உறவினர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.