ரஞ்சி கோப்பை: கேப்டனாக முகமது சிராஜ் – காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் முனைபில் ஐதராபாத் அணி

ஐதராபாத்,

ரஞ்சி கோப்பை போட்டியில் காயம் காரணமாக ஐதராபாத் கேப்டன் திலக் வர்மா விளையாட முடியாத நிலையில், அவருக்கு மாற்றாக முகமது சிராஜ் அணியை வழிநடத்த உள்ளார். வரும் 22,29ம் தேதிகளில் கடைசி குரூப் போட்டிகளில் விளையாட உள்ளது ஐதராபாத் அணி.

2017-ம் ஆண்டில் இருந்து முகமது சிராஜ் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரிலும் 2017-ம் ஆண்டில்தான் அறிமுகமானார். 2015-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முகமது சிராஜ் இதுவரை இந்திய அணிக்காக 45 டெஸ்ட் போட்டிகளில் 139 விக்கெட்டையும், 49 ஓடிஐ போட்டிகளில் 75 விக்கெட்டையும், 16 டி20ஐ போட்டிகளில் 14 விக்கெட்டையும் கைப்பற்றியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரை பொருத்தவரை ஐதராபாத் அணி, பெங்களூரு அணி மற்றும் குஜராத் அணிகளுக்காக 108 போட்டிகளில் விளையாடி 109 விக்கெட்டை எடுத்துள்ளார். உள்நாட்டு தொடர்களை பொருத்தவரை, முதல்தர போட்டிகளில் 309 விக்கெட்டையும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 163 விக்கெட்டையும் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 3 போட்டிகளில் 7 விக்கெட்டையும், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 4 போட்டிகளில் 7 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.

31 வயதான முகமது சிராஜை தேடி தற்போது கேப்டன்சி பொறுப்பு வந்துள்ளது. அவரது 10 ஆண்டுகால உள்நாட்டு கிரிக்கெட் வாழ்வில் முகமது சிராஜிற்கு இது முக்கியமான வளர்ச்சியாகும். அதுவும் அவர் பெரிதும் விரும்பும் ரெட் பால் தொடரில் அவருக்கு கேப்டன்சி தேடி வந்துள்ளது.

ஐதராபாத் அணி தற்போது டி பிரிவில் 5வது இடத்தில் உள்ளது. மும்பை அணி முதலிடத்திலும், சத்தீஸ்கர் அணி 3வது இடத்திலும் உள்ளன. சிராஜ் தலைமையிலான ஐதராபாத் அணி இரண்டு போட்டிகளிலும் வென்றால், அடுத்து காலிறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும். இதன்படி காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் முனைபில் ஐதராபாத் அணி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.