வெனிசுலாவிடம் இருந்து ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கிடைக்கும் – டிரம்ப்

வாஷிங்டன் டி.சி.,

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது, நாடு கடத்தல் நடவடிக்கைக்கு பின்னர் அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிற வளங்கள் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளும் வேலைகளிலும் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, வெனிசுலாவிடம் இருந்து 5 கோடி எண்ணெய் பீப்பாய்கள் அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நமக்கு வழங்க வெனிசுலா முன்வந்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.47,186 ஆகும் என்றார்.

தொடர்ந்து அவர், வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்று கொண்ட பின்னர், அந்நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சிறந்த நட்புறவு ஏற்பட்டு உள்ளது. நிறைய அழுத்தத்தில் இருந்து அந்நாடு விடுவிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார். இது உலக நாடுகளால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

எண்ணெய் வளத்திற்காக வெனிசுலா குறி வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் டிரம்புக்கு எதிராக எழுந்தது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.