மும்பை: உத்தவ் கட்சி கவுன்சிலர் மேயராவதை தடுத்த பாஜக… மகாராஷ்டிராவில் 15 மாநகரில் பெண் மேயர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் எந்த மாநகராட்சிக்கு பெண் மேயர், எந்த மாநகராட்சிக்கு பொது பிரிவை சேர்ந்தவர் மேயர் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கலில் எஸ்.சி பிரிவும் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான நகர்ப்புற மேம்பாட்டுத்துறை லாட்டரி குலுக்கலில் இந்த பிரிவை சேர்க்கவில்லை.

இதற்கு காரணம் மும்பையில் சிவசேனா(ஷிண்டே) மற்றும் பா.ஜ.கவை சேர்ந்த யாரும் எஸ்.சி பிரிவில் இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்படவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து இரண்டு பேர் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கலில் எஸ்.சி பிரிவை சேர்ந்தவர் வரும் பட்சத்தில் உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்தவர்தான் மேயராக தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை வரும். எனவே எஸ்.சி பிரிவை மேயர் லாட்டரி குலுக்கலில் சேர்ப்பதை தவிர்த்துவிட்டனர்.

இதையடுத்து சிவசேனா(உத்தவ்) கட்சியினர் லாட்டரி குலுக்கலில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நடந்த லாட்டரி குலுக்கலில் மும்பை, புனே, நவிமும்பை உட்பட மாநிலம் முழுவதும் 15 மாநகராட்சிகளுக்கு பெண் மேயரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

மும்பை, புனே, நவிமும்பையில் பொதுப்பிரிவை சேர்ந்த பெண் மேயராக பதவியேற்க இருக்கிறார். நாக்பூரிலும் பெண் மேயர் பதவியேற்க இருக்கிறார். மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 89 இடங்களிலும், சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களிலும், மற்றொரு சிவசேனா(உத்தவ்) 65 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இதையடுத்து முதல் முறையாக பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் மும்பை மேயராக பதவியேற்க இருக்கிறார். மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளில் 25 மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்து இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.