State Awards: "என்னை எந்த அடிப்படையில் நீங்க புறக்கணிக்கிறீங்க?" – இயக்குநர் கோபி நயினார் பேட்டி

2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசு மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாலும், பலர் அந்த விருதுகள் நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் விமர்சித்தும் வருகிறார்கள்.

இயக்குநர் பா. ரஞ்சித், கோபி நயினார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் இந்த விருது அறிவிப்புப் பட்டியலை விமர்சித்து பேசியிருந்தார்கள்.

Aram Movie
Aram Movie

2016-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு ‘அறம்’ திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல, அப்படத்திற்கு இன்னும் சில விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கு அவ்வாண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்படவில்லை.

விருது அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டியலைக் காண்கையில், ‘அறம்’, ‘அசுரன்’, ‘கூழாங்கல்’ படங்களைத் தவிர சிறந்த படத்திற்கான முதல் பரிசு வென்ற படத்திற்கே, அவ்வாண்டுகளுக்கான சிறந்த இயக்குநருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கோபி நயினாரும் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், “தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குநருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன்.

உலகம் முழுவதும் முதலாளித்துவத்தைப் பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாகப் பிரிக்கும்.

உரிமை கோருபவர்களைத் தன் அமைப்புக்கும் அரசுக்கும் எதிரானவர்களாகவும் தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்துப் போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இப்பதிவைப் பார்த்ததும், மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

இயக்குநர் கோபி நயினார்
இயக்குநர் கோபி நயினார்

கோபி நயினார், “ஒரு கட்சி அவர்களுடைய விருதுகளை அறிவிக்கிறாங்கனா, அது அவர்களின் விருப்பம். அந்த முடிவில் யாரும் தலையிட முடியாது. அரசு எல்லோருக்கும் பொதுவானதுனா, அரசு அறிவிக்கும் விருதுகளும் அனைவருக்கும் பொதுவாகதானே இருக்கணும்.

கோபி நயினார் ஒரு தலித், அவர் தலித் மக்களுக்கான விடுதலைக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கிறாரு.

சமூக நீதி பேசும் நீங்க அவரைப் புறக்கணிக்கிறதுக்கான காரணமென்ன?” என்றவர், “‘அறம்’ திரைப்படத்தைவிட அந்த ஆண்டுகள்ல வெளியான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘டூலெட்’, ‘ஜோக்கர்’ போன்ற படைப்புகள் மிக முக்கியமான படங்கள்னு நான் குறிப்பிடுவேன்.

அதெல்லாமே மக்களுக்கான திரைப்படங்கள். அப்படங்களுக்கும் விருது அறிவிக்கப்படல. சமூக நீதிப் பேசும் குழு சமூக நீதி பேசுபவர்கள் மேல அக்கறை வச்சிருந்தாங்கனா, மக்களுக்கான படங்களை விருதுக்குத் தேர்வு செய்திருப்பாங்க.

இந்த அரசு பெண்ணுரிமை பத்தி பேசுது. ஆனா, பெண்களைப் பத்தி மோசமான அபிப்ராயங்கள் கொண்ட படங்களுக்கெல்லாம் விருது அறிவிக்கப்பட்டிருக்கு. எதன் அடிப்படையில் இதையெல்லாம் தேர்வு பண்றாங்க என்பதுதான் என்னுடைய கேள்வி?!

தன்னைச் சார்ந்திருக்கிறவங்களை மட்டும் அங்கீகரிப்பதுதான் இதன் நோக்கமா? இப்படியான செயல்கள்னால, இந்த விருது மேல இருக்கிற மரியாதையும் போயிடுச்சு” என்றவரிடம், “சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு வென்றிருக்கிறது ‘அறம்’ திரைப்படம். ஆனால், அப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கு விருது அறிவிக்கப்படவில்லை என்பதை தனிப்பட்ட நோக்கத்துடன் அணுகியதாகப் பார்க்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினோம்.

இயக்குநர் கோபி நயினார்
இயக்குநர் கோபி நயினார்

பதில் தந்தவர், “நிச்சயமா. நான் என்ன பண்ணேன்? என் சமூகத்தின் அடிப்படை வாழ்வுரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுறேன். நான் எப்பவும் திமுக-வுக்கு எதிரா இல்ல. நான் என் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடுறேன். அவ்வளவே! அது ஜனநாயகப் போராட்டம்.

நாங்க போராடுறது உங்களுக்குக் கோபத்தைக் கொடுக்குதுனா, நாங்க போராடக்கூடாதா? அந்தப் போராட்டம் உங்களுக்கு எதிரானதுனா, நீங்க தலித் மக்களுக்கு எதிரானவங்களா? உங்களுடைய சமூகநீதிக்கான பொருள் இதுதானா?

இதை நான் நுட்பமா கேள்விக் கேட்கும்போதுதான் நான் எதிரியாக மாறுறேன்” என்றவர், “‘அறம்’ திரைப்படத்துக்கு மாநில அரசு விருது கொடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்ததுமே, ‘படத்துக்குக் கொடுப்பாங்க. ஆனா, எனக்கு விருது தர மாட்டாங்க’னு சொல்லிட்டேன். என்கூட இருந்த தம்பி ஒருவரும்,’ இருங்க, இப்போதான் அறிவிக்கிறாங்க. நீங்களாகவே சொல்லாதீங்க’னு சொன்னான்.

ஆனா, நான் கணித்தது போலவே, படத்துக்கு மட்டும்தான் விருது அறிவிச்சிருக்காங்க. எனக்கு விருது அறிவிக்கப்படல.

நான் பொதுவெளியில அவர்களை விமர்சனம் செய்து பேசுறது இதுக்குக் காரணமாக இருக்கலாம். எப்பவுமே, விமர்சனங்கள்தான் அற்புதமான ஜனநாயகம்” என்றார்.

மனுஷி
மனுஷி

தொடர்ந்து பேசியவர், “உங்களுக்கு ஆதரவான ஆட்களுக்கே நீங்க விருது அறிவிச்சுக்கோங்க. ஆனா, அதுக்கு அவங்க தகுதியானவங்களா இருக்கணும்.

சிறந்த திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிற படங்களுடைய இயக்குநர்களுக்குத்தான் சிறந்த இயக்குநருக்கான விருதையும் தந்திருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி கொடுக்கல. சிறந்த படத்தைக் கொடுத்தவர், சிறந்த இயக்குநராக இருக்கமாட்டாங்களா?

இப்போ விருதுகள் அவசர அவசரமாகக் கொடுக்கப்படுறதும் ஒரு தேர்தல் அஜெண்டாதான். கலைஞர்களின் வாக்குகளைத் திரட்டுறதுக்காகத்தான் இதை இப்போ பண்ணியிருக்காங்க.

திரைப்படங்கள் மதிக்கப்படணும்னு நோக்கம் தமிழக அரசுக்குக் கிடையாது. உங்களுக்கு ஒருவன் எதிரியாக இருந்தாலும், அவனுடைய திறமையை மதிக்கிறதுக்குப் பெயர்தான் சமூக நீதி.

என்னுடைய ‘மனுஷி’ திரைப்படத்துக்கு சென்சார் போர்ட் 150 கட் கொடுக்கிறாங்க. நீதிமன்றத்துல போராடி, அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வாங்கியிருக்கேன்.

என்னை பாஜக-வும் புறக்கணிக்கிறாங்க. சமூக நீதி பேசுற நீங்களும் என்னைப் புறக்கணிக்கிறீங்க. நான் எங்கதான் போய் நிற்பேன்.

கோபி நயினார்
கோபி நயினார்

எனக்கு நீங்க விருது கொடுக்கலைங்கிறது பிரச்னையே கிடையாது. ஆனா, என்னை நீங்க எந்த அடிப்படையில புறக்கணிக்கிறீங்க? பொதுவெளியில, நான் இவங்களை எதிர்த்த பிறகு ஒவ்வொரு நாளும் நான் வெளில போறதுக்கு எவ்வளவு பயப்படுறேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.

என்னுடைய குடும்பமும் பயப்படுது. அவ்வளவு மிரட்டல்கள் வருது. அதனாலதான், எனக்கு விருது கொடுக்கப்பட்டிருந்தா, நானே என்னைச் சந்தேகப்பட்டிருப்பேன்னு பதிவிட்டிருந்தேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.