இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘லீடர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டைட்டில் போஸ்டரை வாங்கி சிறப்பித்தார் வணிக சங்கத் தலைவர் விக்ரம ராஜா.
அவர் பேசுகையில், “என்னை அழைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் எல்லையில் ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒவ்வொரு வணிகரையும் லெஜெண்ட் சரவணன் அழைத்து சிறப்பித்திருக்கிறார்” என்று கூறினார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “துணிவு படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்கு ஒழுங்காகப் பாட்டு போடுங்கள் என்று மிரட்டுகிறார்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து நடந்த Q & A அமர்வில் படக்குழுவினரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட “லீடர்” டைட்டில் கிடைக்கவில்லை, நீங்கள் இதில் அரசியல் இல்லை என்று வேறு கூறுகிறீர்கள்…
பதில் (சரவணன்): அதனால்தான் எனக்கு கிடைத்திருக்கிறது போல!
கேள்வி: உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை நீங்கள் பார்ப்பீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில் (சரவணன்): நான் பெரும்பாலும் அவற்றைப் பார்ப்பதில்லை, அதற்கு நேரம் ஒதுக்கவும் விரும்புவதில்லை. இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? அனைத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

கேள்வி: இயக்குநரே, உங்கள் “கருடன்” படம் பெரிய ஹிட்டாகியது. அதேபோல் இந்தப் படம் தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
பதில் (இயக்குநர்): இது மிகவும் ஆழமான கேள்வி. அப்படிப்பட்ட படம் இல்லை இது. குடும்பமாக மக்கள் வந்து பார்த்து களிக்க எடுக்கப்பட்ட முழுமையான கமர்ஷியல் படம்தான் இது.
இந்தப் படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியாகிறது. ஏப்ரல் மாதத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமியா, வி.டி.வி. கணேஷ், ஷாம், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.