தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? – அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமுதல்வராக பதவியேற்றுள்ளார்.

அஜித்பவார் மற்றும் சரத்பவார் தலைமையில் செயல்படும் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து தனது மரணத்திற்கு முன்பே சரத்பவாருடன் அஜித்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் இப்போது அஜித்பவார் இல்லாத நிலையில் அஜித்பவார் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும், பா.ஜ.கவும் சரத்பவார் அணியுடன் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணைய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டு சொந்த ஊரான பாராமதி திரும்பி இருக்கும் சுனேத்ரா பவாரை அவரது வீட்டிற்கு சென்று சரத்பவார் சந்தித்து பேசி இருக்கிறார். அஜித்பவார் வீட்டில் தனி அறையில் சுனேத்ராபவார் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

சுனேத்ரா பவார்

இந்த சந்திப்பின் போது சுனேத்ரா பவார் கண்ணீரை அடக்க முடியாமல் அழுததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு முன்பு அஜித்பவாரின் சகோதரி விஜயா பாட்டீல் மற்றும் அஜித்பவாரின் மகன்கள் இரண்டு பேரையும் பிரதிஷ்தான் கல்வி வளாகத்திற்கு அழைத்து அவர்களுடன் தனிப்பட்ட முறையில் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வித்யா பிரதிஷ்தான் கல்வி நிறுவனத்திற்கு சரத் பவார் தலைவராக இருக்கிறார். இதில் அஜித்பவாரும் அறங்காவலராக இருந்தார். இச்சந்திப்பை தொடர்ந்து சரத்பவார் தனது மனைவியோடு அஜித்பவார் இல்லத்திற்கு சென்று சுனேத்ரா பவாரை சந்தித்து பேசினார். பின்னர் சரத்பவார் அளித்த பேட்டியில், அஜித்பவாரின் விமான விபத்து குறித்து சந்தேகம் எழுப்பியதோடு அது குறித்து விசாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். சுனேத்ரா பவாருடன் என்ன பேசிக்கொண்டார் என்ற விபரம் குறித்து சரத்பவார் எதுவும் குறிப்பிடவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.