கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5ம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள்.
”கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா ஜூனியர் விகடன்ல எழுதின கவிதை தொடரான ‘மின்மினிகள்’ படிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு ஹைக்கூ மீதான ஆர்வம் வந்துச்சு. சுஜாதாவின் கவிதைகளும் ரொம்ப பிடிக்கும்.
ஒருமுறை அப்துல் ரகுமான் ஐயாவைச் சந்திக்கும்போது, ‘உங்க பெயரில் ஒரு கவிதைப் போட்டி நடத்தப் போறேன்’னு சொன்னேன். ‘தாராளமாகச் செய்யுங்க’னு சொன்னார். அவர் என்னோட கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கார். என்னோட விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருக்கார்.

ஹைக்கூ என்பது முணு வரிகள்தான். ஆனா, அதற்குள் அவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்குது. என்னோட முதல் ஹைக்கூ விகடன்லதான் தொடங்கினது. ஒரு சமயத்தில் ஹைக்கூவையே பலரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஹைக்கூவே பொய்க்கூனு சொன்னவங்களும் இருக்காங்க. ஆனா என்னைப் பொறுத்த வரை ஹைக்கூ என்பது ஒரு அனுபவம், ஒரு தியானம்.. அது ஒரு இருப்பு.. அது ஒரு பாசிட்டிவ்..
இப்படி அதைச் சொல்லிக்கிட்டே போகலாம். இந்த ஆர்வம்தான் போட்டி நடத்துற அளவுக்கு வந்துடுச்சு. கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா ஹைக்கூவைப் பற்றி சொல்லும்போது, ‘உலக கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்… அழகான படிமங்களால் அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை.

பிரபஞ்சத்தின் அந்தரங்கங்களைத் திடீரென திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை. எல்லாவற்றையும் விட அதன் எளிமை. இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்’ என்பார். அது உண்மையும் கூட! கவிஞர்கள் அமுதபாரதி, ஈரோடு தமிழன்பன், மு.முருகேஷ், வண்ணதாசன், கலாப்ரியா இவங்களோட கவிதைகள் ரொம்ப பிடிக்கும்.
ஒவ்வொரு வருஷ போட்டியின்போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும். உலகம் முழுவதுமிருந்து எங்கேங்கோ இருந்து அற்புதம், அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க. அதில் இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்து தனி நூலாகக் கொண்டு வர்றோம்.
முதல் மூணு கவிதைகளுக்கு மட்டும் 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் எனப் பரிசுக்கள் உண்டு. தேர்வார்கும் 50 கவிதைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் பரிசுகள் அளிக்கிறோம். ‘மெல்ல அசையும் கோவில் யானை’, ‘கொக்கோடு பறக்கும் மீன்’, ‘சூரியனை சுமந்து செல்லும் பாட்டி’, ‘வாடியது கொக்கு’ ஆகிய கவிதை நூல்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.
இப்படி 10 ஆயிரம் கவிதைகள்ல இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்யறது பெரிய சிரமம்னாலும் அந்த 53 கவிதைகள்ல இருந்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்யறது ரொம்ப ரொம்ப சிரமானது. 1..2.. 3.. என்பது சும்மா தேர்வு செய்யணுமே என்பதற்காகத்தான் எடுப்போம். ஆனா, இந்த 1.. 2… 3.. என்பது 53 கவிதைகளுமே 1…2.. 3.. தான்!
ஏன்னா, அவ்வளவும் தரமான கவிதைகளாகத்தான் இருக்கும். இந்தக் கவிதை போட்டிக்கு கு.ஞானசம்பந்தம், நண்பர்கள் மிஷ்கின், கௌதம்மேனன், நடிகைகள் அபிராமி, ப்ரியா பவானிசங்கர்னு பலரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்காங்க.

இந்த விழா வருஷா வருஷம் அப்துல்ரகுமான் ஐயாவோட பிறந்த தினமான ஜூன் 2ம் தேதி அன்று நடக்கும். இந்த வருஷமும் அப்படி ஜூனில்தான் நடக்கிறது. இப்ப போட்டியை அறிவிச்சிருக்கோம். தேர்வான கவிதைகள் குறித்த போட்டி முடிவுகள் மே மாதம் அறிவிப்போம். இந்த முறை முக்கியமான நடுவர்கள் குழு பங்கேற்கிறாங்க.
ஒவ்வொரு முறையும் விழா மேடையில்தான் நடுவர்கள் யார் யாரென அறிவிப்போம். இன்னொரு முக்கியமான விஷயம் நடுவர்கள் குழுவிற்கு கவிதைகள் மட்டுமே அனுப்பி வைப்போம். யார் எழுதினாங்க என்கிற விபரமே யாருக்கும் தெரியாது. இந்தச் சமயத்துல நண்பர் ஆர்.சிவக்குமார் சாருக்கும் பெரிய நன்றி சொல்லிக்கறேன்.
கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளார். பரிசுத் தொகை, விழாவுக்கான செலவுகள் எல்லாமும் அவர் பொறுப்பேத்துகுவார். இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விழா என்பதாலும், கவிதைகள் மீதான பிரியமும் இருக்கறதால இந்த விழாவை உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்தணும்னு நானே விரும்புறேன்” என்கிறார் லிங்குசாமி.