`அமெரிக்காவில் முதலீடு… உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விளக்கும் பியூஷ் கோயல்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

இந்த நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் , “இந்தியா அமெரிக்காவுக்கு எந்த முதலீட்டு உறுதிமொழியும் (investment commitment) அளிக்கவில்லை. ஆனால், ‘விக்சித் பாரத் 2047’ இலக்கை நோக்கி இந்தியா வேகமாக வளர்ச்சி அடைவதால், அடுத்த காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து அதிக அளவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்பது இயல்பானது. அம்ரித் காலத்தில் விக்சித் பாரத் 2047 நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

இதனால், பெரிய அளவிலான எரிசக்தி (energy), டேட்டா சென்டர் உபகரணங்கள், ஐசிடி பொருட்கள் தேவைப்படும். நமது எஃகு உற்பத்தி திறன் தற்போதைய 140 மில்லியன் டன்னிலிருந்து அடுத்த சில ஆண்டுகளில் 300 மில்லியன் டன்னாக உயரும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விமானங்கள் மட்டும் 70-80 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும். என்ஜின்கள், உதிரி பாகங்கள் சேர்த்தால் 100 பில்லியன் டாலரை எட்டும்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

முதல் கட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டன. அடுத்த 4-5 நாட்களில் கூட்டு அறிக்கை வெளியாகும். அதன் பின்னர் அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 50%-லிருந்து 18%-ஆக குறைக்கும்.

சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னரே இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரியைக் குறைக்க முடியும். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய வாய்ப்புகளைத் திறக்கும். விவசாயிகள், மீனவர்கள், MSME-களுக்கு பயன் தரும்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.