தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு; காரணமென்ன? தடுக்க என்ன வழி? மருத்துவர் விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.

அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. ஒரே ஆண்டில் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டுவது இதுவே முதல் முறை.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புற்றுநோய் பாதிப்பு
புற்றுநோய் பாதிப்பு

1,00,097 பேரில் 53, 542 பெண்கள்… 46,555 ஆண்கள்…

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

புற்றுநோய் அதிகமாவதற்கு காரணம் என்ன, இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் ரத்னா தேவியிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்

இதுத்தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “2020 ஆம் ஆண்டில் இருந்தே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு காலத்தில் ஆயிரங்களில் இருந்த பாதிப்பு தற்போது லட்சத்தை எட்டியிருக்கிறது.

புகைப்பழக்கங்களால் ஆண்கள் வாய்ப் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் மார்பாக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக ஆண்களை விட பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் ரத்னா தேவி
புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் ரத்னா தேவி

காரணம் என்ன?

உடல் பருமன், முறையற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்களால் இந்த புற்றுநோய் பாதிப்பு அதிகமாகிறது.

அதிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, போதிய உடல் உழைப்பு இல்லாதது, பேலன்ஸ் டயட் எடுத்துகொள்ளாதது, மன அழுத்தம் போன்ற விஷயங்களும் இந்தப் புற்றுநோய் பாதிப்புக்கு ஒருவித காரணங்களாக இருக்கின்றனர்.

இதையெல்லாம் நாம் சரி செய்தாலே புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.

புற்றுநோயில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உடல் பயிற்சி செய்தால் 30 சதவிகிதம் புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதனால் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

தவிர மாசுபாடுகளாலும் புற்றுநோய் பாதிப்பு வருகிறது. அதனைத் தடுக்க அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் புற்றுநோய் இருந்ததே தெரியாமல் மக்கள் உயிரிழந்த சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது ஸ்கிரினிங் (நோய் கண்டறிதல்) அதிகமாக இருக்கிறது.

புற்றுநோய் பாதிப்பு
புற்றுநோய் பாதிப்பு

புற்றுநோய் கண்டறிதலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அரசாங்கம் நன்றாகவே செயல்படுகிறது. புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு அரசு காப்பீட்டு திட்டங்கள் பயனளிக்கும் வகையில் இருக்கிறது.

நகர்புறங்களில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு முன்பைவிட அதிகமாக இருக்கிறது. அந்த அளவிலான விழிப்புணர்வை கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.