பன்னீர் செல்வம், பழனிசாமி வழியில் தினகரனுமா? – என்ன முடிவெடுக்கப் போகிறார் வி.கே.சசிகலா?

வி.கே சசிகலாவைச் சந்தித்ததையடுத்து தன் கட்சியில் பொறுப்பு வகித்த ஜீவிதா நாச்சியாரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் சசிகலாவின் அக்கா மகனும் அ.ம.மு.க தலைவருமான டி.டி.வி தினகரன். ஜெ. மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு இறங்கு முகம்தான். முதலில் அவர் முதலைமைச்சராக பரிந்துரைத்த ஒ.பன்னீர்செல்வம் அவருக்கெதிராகவே தர்ம யுத்தம் தொடங்கினார்.

அடுத்து முதல்வராக அவர் கை காட்டிய எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்தே ஒதுக்கினார்.

இப்போது தங்கை மகனும் எதிர்க்கத் தொடங்கி விட்டாரோ எனத் தோன்றுகிறது.

ஆனால் இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் இன்னும், ‘அதிமுகவின் பொதுச் செயலாளர் நானே’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது கட்டுப்பாட்டிலுள்ள ஜெயா டிவியைப் பொறுத்தவரை அதிமுகவின் பொதுச் செயலாளர் சின்னம்மாதான்.

பவர் சென்டர்!

கட்சிக்குள் திரும்பி வர வழி இருக்கிறதா, அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும்? – அ இ அதிமுக வின் சீனியர் ஒருவ‌ரிடம் பேசினோம்.

”கட்சி அம்மாவின் தலைமையின் கீழ் வந்த புதுசுல கட்சிக்குள் வந்தாங்க. அம்மாவின் உதவியாளரா போயஸ் தோட்டத்தில் நுழைந்தவரை உயிர் தோழி ஆக்கியது காலம். விளைவு நாங்க சின்னம்மான்னு கூப்பிட்டோம்.

கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அவங்க வச்சதுதான் சட்டம்ன்னு இருந்திச்சு.

‘எம்.எல்.ஏ., எம்.பி. சீட் அமைச்சரவையில் யார் இருக்கணும், யார் இருக்க கூடாது’ தொடங்கி, அரசு நிர்வாகத்தில் ஒப்பந்தப் பணிகள் வரை எல்லாத்தையும் தீர்மானிக்கிற‌ பவர் சென்டரா உருவெடுத்தாங்க.

அம்மா சிறைக்குச் சென்ற சமயங்களில் முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றது தொடங்கி, பின்னாளில் தான் சிறைக்குச் சென்ற போது எடப்பாடி பழனிசாமி அந்தப் பொறுப்பை ஏற்றது வரை கட்சியில் இவங்க கை தான் ஓங்கியிருந்தது.

ஆனால் எல்லாமே அம்மா இருந்த வரைக்கும்தான். அவங்க மறைந்த அடுத்த சில தினங்களில் கிடைத்த சிறைத் தண்டனை எல்லாத்தையும் ஒரே இரவில் காலி செய்துடுச்சு. சிறைவாசத்தை முடிச்சுட்டுத் திரும்பிய போது, எடப்பாடி பழனிசாமி பதவியை அவர்கிட்டத் தரத் தயாராக இல்லை. கட்சியின் முக்கால்வாசி நிர்வாகிகளும் தொண்டர்களும் இவங்களை மறந்தே போயிட்டாங்க‌.

Edapadi palanisamy

அம்மா மேல பாசம் இருந்தா…

ஆனா அவங்களும் கொஞ்சமும் சலிப்படையாம, `கண்ணுக்கெட்டிய வரை எதிரி இல்லை என்கிறார் ஸ்டாலின், நான் ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டு’ன்னு பேசிட்டிருக்கிறார்.

தினகரனைப் பொறூத்தவரை தனிக்கட்சி தொடங்கிட்டதால தனக்குப் போட்டியா வர மாட்டார்ன்னு அவரை தே ஜ கூட்டணியில சேர்த்துக்க சம்மதிச்சிட்டார் எடப்பாடியார்.

சசிகலாவும் பன்னீரும் அதிமுகவையே குறி வைப்பதால்தான் அவங்க ரெண்டு பேர் விஷயத்துல கறாரா இருக்கிறார்னு தோணுது.

‘கட்சியில் பிளவு, ஒன்றிணைக்கும் முயற்சி’ங்கிற பேச்சுகளையெல்லாம் பழனிசாமி விரும்பலை.

அதேநேரம் பழனிசாமி தலைமையை ஏத்து அதிமுகவுல அந்தம்மா சேருவாங்களான்னும் சொல்ல முடியலை. தேர்தல் தேதி அறிவிக்கறதுக்குள் ஏதாவதொரு முடிவை எடுத்தாக வேண்டிய சூழல்ல இருக்கிற அவங்க என்ன செய்யப் போறாங்கனு யாருக்கும் தெரியலை.

எங்களைக் கேட்டால், எந்த முடிவானாலும் அம்மா மீது உண்மையான அன்பு வச்சிருந்தவங்களா இருந்தா, அம்மா கட்டிக் காத்த கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கணும்னு எதிர்பார்க்கிறோம்’ என்கிறார் அவர்.

தினகரன் – சசிகலா

விடாது கட்சி!

மன்னார்குடி குடும்பத்தினருக்கு நெருக்கமான முன்னாள் பத்திரிகையாளர் ஒருவரிட‌ம் பேசிய போது,

‘பன்னீர் செல்வம் மாதிரில்லாம் அந்தம்மா எந்தக் காலத்துலயும் கட்சிக்கு எதிரா எந்தவொரு பேச்சையும் பேச மாட்டாங்க. விடாது கருப்புனு சொல்வாங்களே, அதேபோல அவங்களை விடாது கட்சி. காரணம், அவங்களால அந்தக் கட்சிக்கு எதிரா சிந்திக்க கூட முடியாது. அதேபோல அரசியலை விட்டு விலகற முடிவையும் எடுக்க மாட்டாங்க. அதனால திமுக பக்கமோ விஜய் கட்சி பக்கமோ போக வாய்ப்பே இல்லை. தே.ஜ கூட்டணியில இடம் பிடிக்க முயற்சி செய்வாங்க, அல்லது எதுவும் நடக்கலைன்னா கொஞ்சம் பொறுமை காக்கலாம்னு தற்காலிகமா வருகிற தேர்தல்ல எந்தவித பங்களிப்பும் செய்யாம ஒதுங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கு’ என்கிறார் அவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.