இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. இதுவரை நடைபெறும் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவிற்கு எதிராக தட்டு தடுமாறி வெற்றியை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக நமிபியாவை எதிர்கொள்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பு நமிபியாவிற்கு எதிரான போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பிய நிலையில், இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Add Zee News as a Preferred Source

இந்திய அணி
மும்பையில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றி அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 77 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்த கட்டத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ போராடி தனி ஒருவராக 84 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 161 ரன்கள் என்ற டார்கெட்டை செட் செய்தது. பந்து வீச்சில் சிறப்பாக இருந்ததால் 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியில் நடக்கும் நமிபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
சிராஜிற்கு பதில் பும்ரா?
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கடைசி கட்டத்தில் இந்திய அணியில் சேர்ந்த முகமது சிராஜ் விளையாடினார். டெல்லியில் நடைபெற உள்ள போட்டியில் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருந்தால் அவர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. நமிபியா போட்டிக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் பும்ரா போன்ற முக்கியமான வீரர் விளையாட வேண்டியது அவசியம். எனவே சிராஜிற்கு பதில் 2வது போட்டியில் பும்ரா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிங்கு சிங்கிற்கு பதில் வாஷிங்டன் சுந்தர்!
அமெரிக்கா அணிக்கு எதிராக வெற்றிக்கு பிறகு கேப்டன் சூரியகுமார் யாதவ் டெல்லியில் நடைபெறும் போட்டி வாஷிங்டன் சுந்தர் அணியில் இணைவார் என்று குறிப்பிட்டு இருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது காயம் காரணம் சுந்தர் விலகினார். டெல்லி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுந்தர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. எனவே ரிங்கு சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுந்தர் விளையாட வைக்கலாம்.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அமெரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது கடும் காய்ச்சலில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் முழுமையாக குணமடையாத பட்சத்தில் நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இஷான் கிஷனுடன் இணைந்து சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம். இருப்பினும் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தொடர்வார் என்று கூறப்படுகிறது.
About the Author
RK Spark