பொதுவாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே உலக அளவில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கும், இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கும் பயணம் செய்ய மாட்டோம் என்று முடிவு எடுத்ததால், இருவரும் விளையாடும் போட்டிகள் பொதுவான மைதானத்திலேயே நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு பயணம் செய்ய மாட்டோம் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டது. இருப்பினும் இந்தியாவிற்கு எதிரான போட்டியை நாங்கள் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் நிலவியது.
Add Zee News as a Preferred Source
THE U-TURN OF PAKISTAN IS DONE.
Pakistani PM has given his approval to PCB to play against India on 15th February.
Feb – Pakistan Government ordered to boycott the game against India.
Feb – Pakistan Government ordered PCB to play the game against India. pic.twitter.com/VVSjbDJY10
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 9, 2026
பல்டி அடித்த பாகிஸ்தான்
மற்ற அணிகளுடன் விளையாடுவோம், இந்தியாவிற்கு எதிராக விளையாட மாட்டோம் என்று அடம் பிடித்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அரசு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளித்துள்ளது. கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினால் ஏற்படும் நிதி சிக்கலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐசிசி எச்சரித்தது. மேலும் இலங்கை அதிபர் பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்டு இந்த பிரச்சனையை சமூகமாக தீர்த்து போட்டி நடைபெற ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். இதே போல மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது. மேலும் ஐசிசி பல்வேறு எச்சரிக்கை விடுத்ததால் பாகிஸ்தான் தற்போது முடிவை மாற்றி உள்ளது.
பாகிஸ்தான் அரசு அறிக்கை
பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்றும், பலதரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை கருத்தில் கொண்டும், பிப்ரவரி 15ம் தேதி அன்று நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட பாகிஸ்தான் அணிக்கு அரசு உத்தரவிடுகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “கிரிக்கெட்டின் உணர்வை பாதுகாக்கவும், அனைத்து நாடுகளிலும் இந்த விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் அணிக்கு நாட்டு மக்களின் வாழ்த்துகள். அவர்கள் தேச பெருமையுடன் களத்தில் போராடுவார்கள் என்று நம்புகிறோம்,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடக்கும் போட்டி!
இந்த அறிவிப்பால், கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் இந்த போட்டி, வழக்கம்போல பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் மோதின. இதில் 3 முறையும் இந்திய அணி வெற்றி பெற்றது.
About the Author
RK Spark