மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: 2வது இடத்தில் அஜித் பவார் கட்சி; தோல்வியடைந்த வாரிசுகள் யார், யார்?

மகாராஷ்டிராவில் கடந்த 7ம் தேதி 12 ஜில்லா பரிஷத் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் பா.ஜ.க ஜில்லா பரிஷத்தில் மொத்தமுள்ள 531 இடங்களில் பா.ஜ.க 225 இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் வந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் 165 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துக்கொண்டது.

சிவசேனா(ஷிண்டே) 162 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் வெறும் 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

புனே மாவட்டத்தில் மொத்தமுள்ள 73 இடங்களில் 51 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றது. அஜித்பவாரின் மரணம் காரணமாக அனுதாப அலையில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றதாகக் கருதப்படுகிறது.

பட்னாவிஸ், ஷிண்டே
பட்னாவிஸ், ஷிண்டே

சோலாப்பூர் ஜில்லா பரிஷத்தில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சாங்கிலி, சதாராவில் கூட்டணிக் கட்சிகளின் துணையோடு பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கோலாப்பூரில் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

லாத்தூர் ஜில்லா பரிஷத்தை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. 20 ஜில்லா பரிஷத் இடங்களில் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ரத்னகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 56 இடங்களில் 41 இடங்களை சிவசேனா(ஷிண்டே) பிடித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 125 பஞ்சாயத்து சமிதிகளில் இருக்கும் 1462 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 459 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 306 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

இத்தேர்தலில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இம்முறையும் எதிர்க்கட்சிகள் பின் தங்கியே இருந்தன. காங்கிரஸ் 97 இடங்களிலும், சிவசேனா(உத்தவ்) 89 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்கு ஷாக்

இத்தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்களின் வாரிசுகள் படுதோல்வியைச் சந்தித்தனர். பர்பானி மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுரேஷ் வர்புட்கரின் மகன், மருமகள், மகள் என மூன்று பேர் போட்டியிட்டனர்.

இதில் மகன், மருமகள் பா.ஜ.க சார்பாகவும், மகள் சிவசேனா(உத்தவ்) சார்பாகவும் போட்டியிட்டனர். ஆனால் மூன்று பேருமே தோல்வியைத் தழுவினர். சுரேஷ் கடந்த ஆண்டுதான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார்.

இது தவிர மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயகுமாரின் சகோதரர் அருண் மற்றும் மைத்துனி பாரதி கோரே, தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) எம்.எல்.ஏ உத்தம் ஜன்கர் மகன் ஜீவன், சோலாப்பூர் பா.ஜ.க மூத்த தலைவர் தீபக் சாலுக்கேயின் மகன் யஷ்ராஜ் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சோலாப்பூர் மாவட்டத் தலைவர் உமேஷ் பாட்டீல், அவரது சகோதரர் சந்தோஷ் ஆகியோரும் தோல்வியைச் சந்தித்தனர். மகாராஷ்டிராவின் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நரேந்திர பாட்டீல் தனது மனைவியை வேட்பாளராக நிறுத்தினார்.

அவரும் வெறும் 22 வயதான சிவசேனா வேட்பாளர் மிருணாள் மகேஷ் பாட்டீலிடம் தோல்வியடைந்தார்.

பாஜகவின் சரத் லாடின் மனைவி தனஸ்ரீ லாட், காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வஜீத் கதமின் மருமகனான காங்கிரஸ் வேட்பாளர் ரிஷிகேஷ் லாடால் தோற்கடிக்கப்பட்டார்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பிரகாஷ் அபித்கரின் மைத்துனி ரோகிணி அபித்கர், அமைச்சர் பரத் கோகாவலேவின் மகன் விகாஸ், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சத்யஜீத் தேஷ்முக்கின் மகள் சாய் தேஜஸ்வி தேஷ்முக் ஆகியோர் ஜில்லா பரிஷத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

சாய் தேஜஸ்வி அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர், மாநில சட்ட மேலவையின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த சிவாஜிராவ் தேஷ்முக்கின் பேத்தி ஆவார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.