`இரவில் படுக்கச்சென்ற இளம்பெண் இச்சாதாரி பாம்பாக மாறினாரா?' – பாம்பு தோல், வளையலை விட்டுவிட்டு மாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிகன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரீனா(20). இப்பெண் இரவில் தனது படுக்கைக்கு படுக்க சென்றார். ஆனால் காலையில் அவரது படுக்கைக்கு சென்றபோது அவரை காணவில்லை. ஆனால் அவரது படுக்கையில் 5 அடி நீளமுள்ள பாம்பு தோல் மட்டும் கிடந்தது.

அதோடு அப்பெண்ணின் தங்க வளையல், மோதிரம் மற்றும் அவரின் ஆடைகளும் படுக்கையில் கிடந்தது. இதனால் அப்பெண் என்ன ஆனார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண் எப்படி காணாமல் போனார் என்ற கேள்வி எழுந்தது.

அவர் காணாமல் போன செய்தி கிராமம் முழுக்க பரவியது. அப்பெண் தூங்கிய அறையின் தரையில் ஒரு பாம்பு குழி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த காலங்களில் அங்கு அவ்வப்போது பாம்புகள் வந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இச்சாதாரி பாம்பாக மாறினாரா?

இதனால் அந்தப் பெண் ஒரு “இச்சாதாரி பாம்பு” (புராண கதைப்படி வடிவத்தை மாற்றும் பாம்பு) என்ற வதந்தி கிராமம் முழுக்க பரவி மக்கள் பீதியடைந்தனர்.

பாம்பு
பாம்பு

அப்பெண் பில்லிசூனியத்தால்தான் காணாமல் போயிருக்கலாம் என்று கிராம மக்கள் பேசிக்கொண்டனர். ஏராளமான கிராமத்தினர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து பாம்புத்தோலை பார்த்துவிட்டு சென்றனர். அப்பெண் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். அவர்கள் தங்களது மகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போலீஸார் அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண்ணை கண்டுபிடிக்க போலீஸார் பல குழுக்களை அமைத்தனர்.

பாம்பு வதந்திகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், “அந்தப் பெண் பாம்பாக மாறியதாக வெளியான செய்திகள் வெறும் வதந்திகள் ஆகும். அவற்றை மக்கள் நம்பக்கூடாது. பாம்புத் தோல் மற்றும் துணிகள் இருப்பது விசாரணையைத் திசைதிருப்ப அல்லது கவனச்சிதறலை உருவாக்க திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம்” என்றார்.

காதலனுடன் இரவில் ஓடிய பெண்

இதற்கிடையே காணாமல் போன பெண்ணின் மொபைல் போன் எண்ணை கண்காணித்தபோது அவர் இருக்கும் இடம் தெரிய வந்தது. போலீஸாரின் விசாரணையில், ரீனா அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். அப்பெண் காதலித்த நபரும் காணாமல் போய் இருந்தார். இருவரும் காதலிப்பது தெரிந்தும் அப்பெண்ணின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் அவரது திருமணத்தை முடிக்க நிச்சயம் செய்தனர். குடும்பத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஓடிப்போவதற்கு முன்பு அவர் பாம்புத்தோல் சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீஸார் தெரிவித்தனர். ரீனாவின் தந்தை ராகேஷ் வால்மீகி அந்த இளைஞருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

படுக்கையில் பாம்புத்தோல்

எட்டாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவரான ரீனா, மூன்று மாதங்களாக தனது காதலனுடன் தப்பிக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. முன்னதாக 130 கி.மீ தொலைவில் உள்ள மைன்புரியில் உள்ள ஒரு ஷேஷ்நாக் கோயிலுக்குச் சென்று, ஒரு பாம்பு சிலையை ரீனா கொண்டு வந்தார், பின்னர் தனது கனவில் பாம்புகள் தோன்றுவதாகக் கூறினார். வீட்டை விட்டு ஓடும்போதும் சிலையை மட்டுமே எடுத்துக்கொண்டார். அப்பெண்ணை கண்டுபிடித்து கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் இருக்கும் இடம் அவரின் மொபைல் போன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.