பிப். 17 ஆம் தேதி சூரிய கிரகணம்… பரிகாரம் செய்ய வேண்டுமா? ஜோதிடம் சொல்வது என்ன?

வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவை சூரிய கிரகணம் மற்றும் சந்திரகிரகணம். ஓர் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை நிகழும் இந்தக் கிரகணங்கள் குறித்த ஜோதிட சாஸ்திரம் மிகவும் விரிவாகப் பேசுகிறது.

நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா (நிழல்) கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. சூரியன், சந்திரன் ஆகியன ராகுவோடும் கேதுவோடும் இணைந்திருக்கும் காலத்தில் கிரகணங்கள் தோன்றும்.

சூரியன், சந்திரன் ஆகியன ராகுவுடன் இணைந்திருந்தால் சூரிய கிரகணமும் சந்திரனுடன் கேதுவோடும் சூரியன் ராகுவோடும் இருந்தால் சந்திரகிரகணம் தோன்றும் என்பதை நம் பஞ்சாங்கங்கள் மூலம் ஜோதிடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்திருக்கின்றனர். அதாவது அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் பௌர்ணமி நாளில் சந்திரகிரகணமும் தோன்றும்.

சூரிய கிரகணம் - ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்
சூரிய கிரகணம் – ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

அந்த வகையில் இந்த ஆண்டு சூரியன் வரும் பிப்ரவரி 17 – ம் தேதி கும்பராசியில் சஞ்சரிக்கிறார். கும்பராசியில் தற்போது ராகு பகவான் சஞ்சரித்துவருகிறார். சந்திரனும் அந்த நாளில் கும்பத்தில் இணைகிறார். எனவே அந்த நாளில் கிரகணம் தோன்றுகிறது.

பிப்ரவரி 17 அன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி மாலை 7:57 மணிவரை கிரகணம் நிகழ இருக்கிறது. இந்தக் கிரகண காலத்தில் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா என்னும் கேள்வி பலருக்குள்ளும் இருக்கிறது. மேலும் கோயில்களில் பூஜை முறைகளில் மாற்றம் இருக்குமா என்பது குறித்த சந்தேகமும் உள்ளது. இது குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதரிடம் கேட்டோம்.

“ஜோதிட அடிப்படையில் கிரகணங்கள் மிகவும் முக்கியமானவை. ஒருவரின் ஜனன காலத்தை அடிப்படையாகக் கொண்டே ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன. எனவே ஜனன காலத்தில் கிரகணங்கள் இருந்தால் அவை ஜாதகத்தில் தெரியும். அதற்குப் பரிகாரங்கள் செய்ய வேண்டி இருக்கலாம்.

குறிப்பாக இந்தக் சூரியகிரகண நாளில் ராகுவோடு, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் என நான்கு கிரகங்கள் இணைகின்றன. வாக்கியப்படி என்றால் சனியும் சேர்ந்தே இருக்கிறார். எனவே இந்தக் கிரகணம் மிகவும் முக்கியமானது.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

அதேவேளையில் நம் முன்னோர்கள் சில விதிவிலக்குகளையும் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். எந்தக் கிரகணம் எல்லாம் நம் தேசத்தில் தெரியவில்லையோ அவற்றுக்கெல்லாம் நாம் பரிகாரங்கள் செய்ய வேண்டியதில்லை. காரணம் அவற்றின் நேரடி பாதிப்பு நமக்கு இருக்காது என்பதுதான் அதற்குக் காரணம்.

பொதுவாக சூரிய கிரகண காலத்தில் வெறும் கண்ணால் சூரியனைப் பார்க்கக் கூடாது என்கிறது அறிவியல். நமக்கு சூரிய கிரகணம் தெரியாது என்றால் அந்த வேளையில் நாம் சூரியனைப் பார்த்தாலும் நமக்கு ஆபத்து ஏற்படாது என்பது அறிவியல். இதையே நம் முன்னோர்களும் கடைப்பிடித்துள்ளனர்.

பிப்ரவரி 17 வரும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. எனவே நம் தேசத்தில் நாம் பரிகாரங்களோ சிறப்பு பூஜைகளோ செய்ய வேண்டியதில்லை. மேலும் ஆலயநடைகளும் அந்த வேளையில் சாத்தப்படுவதில்லை. எனவே பரிகாரம் பற்றிய கவலை தேவையில்லை.

ஆனாலும் இந்தக் கிரக சேர்க்கை என்பது வான் வெளியில் நிகழ்வது உண்மை என்பதால் நிறைய இறைவழிபாடு செய்ய வேண்டும். கிரகணத்துக்கு முன்னோ பின்னோ சில இயற்கை சீற்றங்கள், அசம்பாவிதங்கள் நிகழலாம் என்பதால் தவறாமல் எல்லோரும் காலபைரவரை வழிபடுவது நல்லது.

பரிகாரம்

அன்றைய தினம் அமாவாசையாக இருப்பதால் முன்னோர்கள் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும். பெரும்பாலும் இந்த நாளில்தான் மயானக் கொள்ளை நிகழ்வுகள் நடைபெறும். அவற்றில் கலந்துகொண்டு வழிபட்டாலும் அம்மனின் அருளால் அனைத்தும் நன்மையாக நடைபெறும்.

அடுத்த மாதத் தொடக்கத்தில் வரும் சந்திரகிரகணம் நம் நாட்டில் தெரியும். அதற்கு பரிகாரங்கள் செய்ய வேண்டும்” என்று சொன்னார் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.