`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' – சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

 அப்போது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம், “சகோதரி, மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள்” என திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பேசினார்.

பின் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “கௌரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்.

 அதிமுக சார்பிலும், அடுத்து முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிஜேபி மற்றும் கூட்டணி சார்பில் ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளேன்.

யுஜிசி பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட 5 கோரிக்கைகளையும் வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் 9ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். உங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக எடப்பாடி பழனிசாமி சார்பில் கூறிக்கொள்கிறேன்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது உங்களது கனவு என்னவென்று கூறுங்கள் என கேட்கின்றனர். திமுக ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என தற்போது ஆசிரியர்கள் கூறுகின்றனர். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். இவர்களை விடுங்கள் அங்கன்வாடியினர், ஆசிரியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஜாக்டோ ஜியோவை வைத்து தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டனர். திமுக மீது நம்பிக்கை இல்லாமல் தான் சகோதரிகள் போராடிக் கொண்டு வருகின்றனர்.

நேற்று பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆணி அடித்தது போல் எதிர்க்கட்சிக்கு பதில் கூறியுள்ளார்.

 காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகள் எந்தெந்த காலத்தில் என்னென்ன தவறு செய்தார்கள்…. எத்தனை திட்டங்கள் விடுபட்டுள்ளது. அதை அனைத்தையும் பாஜக செய்துள்ளது. மோசமான ஆட்சி என்று கிழித்துவிட்டார். அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டுப் போகட்டும். ரயில் நிலையம் மற்றும் பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும்.  மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம் கேட்க வேண்டும்.

திமுகவிற்கு எதிராக உள்ள அனைவரையும் கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் தவறு இல்லை. தற்போது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தானே கூப்பிடுகின்றனர். திமுக வந்தார்களா? வரமாட்டார்கள் நாங்கள்தான் வரவேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.