'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' – நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ்.

அவர் பேசும்போது, “முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், விகடன் நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் சாருக்கும் என் நன்றிகள்.

விகடனுக்கும் எனக்குமான தொடர்பு 26 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. 2000-ம் ஆண்டில் விகடன் அட்டைப்படத்தில் நடிகனாக இல்லாத ஒரு பாடகனாக என் முகம் வந்ததை என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன்.

கருணாஸ்
கருணாஸ்

என் மகன் கென் கருணாஸைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள். ‘அசுரன்’ படத்தில் அவன் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தான். அந்தச் சமயத்தில், அரசியலில் நான் இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார்.

அதன் பிறகு எனக்கு அதில் ஈடுபாடு இல்லாமல்போனது. மீண்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்து இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்தேன். ‘இனிமேல் நான் காமெடி பண்ணுவது சரியாக வராது. ஒரு குணச்சித்திர நடிகனாக நடிக்கிறேன்’ என்று சொன்னேன்.

வெற்றிமாறன் என்னிடம் ‘வெக்கை’ நாவலைப் படிக்கச் சொல்லி, அதில் அப்பாவாக என்னையும், மகனாக கென்னையும் நடிக்க வைக்கலாம் என்றார்.

ஆனால், நாவலைப் படித்த பிறகு நான் வெற்றியிடம், ‘வெற்றி, இந்தக் கதையில் நான் நடிப்பதைவிட ஒரு பெரிய ஹீரோ நடித்தால் படம் மிகப்பெரிய ஹிட்டாகும். அதனால் ஒரு ஹீரோவை வைத்து எடுங்கள்’ என்றேன்.

அவர் ‘உங்களை வைத்து எடுக்கத்தான் ஆசைப்படுகிறேன்’ என்று சொல்லியும், என் மகனுக்காகவும், படத்தின் வணிக வெற்றிக்காகவும் நான் விட்டுக்கொடுத்த படம்தான் ‘அசுரன்.’

வெற்றிமாறன் போன்ற ஒரு தேசிய அளவிலான இயக்குநர் வாய்ப்பு தரும்போது, ‘வேண்டாம், என் மகனுக்காகப் பண்ணுங்க’ என்று சொல்வதற்கு ஒரு தனி மனசு வேண்டும். அதை ஒரு அப்பாவாக நான் செய்ததில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

நம்பிக்கை விருதுகள் 2025
நம்பிக்கை விருதுகள் 2025

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.