`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவில், ‘பறக்கவைக்கும் ராஜாளி’ விருதை வென்ற பைக் ரேசர் மாயாவைப் பாராட்டி இயக்குநர் சிவா பேசினார்.

“மாயா ஒருமுறை சொன்னார்கள், ‘எனக்கு என்ன நேர்ந்ததோ அது நான் அல்ல; நான் என்னவாக மாற விரும்புகிறேனோ அதுதான் நான்’ (I am not what happened to me. I am what I choose to become).
அந்த வைராக்கியம்தான் அவரை இன்று இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட அந்தத் தழும்பு இன்று ஒரு வீரத் தழும்பாக மாறியிருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்யும் மாயா இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்’’ என்றார் சிவா.
“அஜித் சார் மற்றும் டிரோன் குழுவினரோடு பணியாற்றுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. டோட்டலாக அது வேறோர் உலகமாக இருக்கிறது.
அங்கே நிறைய சவால்கள் இருக்கின்றன, ஆனால் அதைவிட ஒரு மிகப்பெரிய பேஷன் (Passion) அந்த வேலையின் பின்னால் இருக்கிறது. அஜித் சார் அதை மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறார்.

`அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?’ என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும்.
அந்தப் படம் எத்தகைய ஜானராக (Genre) இருக்கும் என்பதைத் தற்போதைக்கு ரகசியமாகவே வைத்திருக்கிறோம். அஜித் சார் தனது பேஷனை (ரேஸிங் மற்றும் சினிமா) மிகவும் அழகாக பேலன்ஸ் செய்கிறார்.
அதேபோல் விஜய் சாரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இருவருமே மிகவும் இன்ஸ்பிரேஷனலான மனிதர்கள்’’ என்றார்.