சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ‘பராசக்தி’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.
அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்தன.
மேலும், சிவகார்த்திகேயனின் மற்றொரு படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ரஜினி படத்தை டைரக்டர் செய்வதற்கு ஆயத்தமாகிவிட்டார்.

இந்நிலையில், அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என இணையத்தில் பேசப்பட்டது.
எஸ்.கே தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘தாய் கிழவி’ படத்தை இயக்கி இருப்பவர் இந்த சிவக்குமார் முருகேசன். அப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. அதுமட்டுமல்ல, கடந்தாண்டு வெளிவந்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் கதாசிரியரும் இவர்தான்.
தற்போது அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. படத்திற்கு ‘சேயோன்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.
சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
‘அமரன்’ பட வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்தப் படத்தை தயாரிப்பதாக முடிவெடுத்திருக்கிறது ராஜ்கமல் நிறுவனம்.

இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முதல் முறையாக எஸ்.கே நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். இயக்குநரின் முதல் பட ரிலீஸுக்கு முன்பே அவருடன் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.
இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நாளை காலை வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.