கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக-வை கரை சேர்க்க செந்தில் பாலாஜியும், அதிமுக-வை வெற்றி பெற வைப்பதற்கு வேலுமணியும் திட்டமிட்டு வருகிறார்கள். கொங்கு மண்டல அரசியல் எப்போதுமே அனல் பறக்கும்.

ஏற்கெனவே கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில்தான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
செங்கோட்டையன் வருகைக்குப் பிறகு தவெகவும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த முறை கோவையில் வெற்றி பெறாத குறையை இந்த முறை சரி செய்வதற்காக திமுக-வும் காய் நகர்த்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் செந்தில் பாலாஜி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கோவையில் அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
வருகிற பிப்ரவரி 22-ம் தேதி திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு கருமத்தம்பட்டி அருகே நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 27-ம் தேதி திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சி மாநாடு எல் அண்ட் டி பைபாஸில் நடைபெறவுள்ளது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டுள்ளனர்.