தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணிக்குள் இடம்பெற்றிருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் திமுக- காங்கிரஸ் மோதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் சமயத்தில் இது போன்ற சலசலப்புகள் வரத்தான் செய்யும். முரண்கள் எழும்.
திமுக தலைமையிலான கூட்டணியிலும் இதுதான் நிகழ்கிறது. ஆனால் இறுதியில் சுமுகமான முறையில் தீர்வு காணப்படும்.
இதனால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பலவீனமானக் கூட்டணியில் போட்டி அதிகமாக இருக்காது. அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை இருக்காது.
பலமுள்ள கூட்டணியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான இயல்பான போட்டி எழும்.
அதிகாரப் பகிர்வு தேவை என்கிற அந்தக் கருத்தும் எழும். இவ்வாறு சலசலப்பு எழுவதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம், திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது, ஆட்சிக்கு வரப்போகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக என்ன முயற்சியை மேற்கொண்டாலும், என்ன சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டங்களைத் தீட்டினாலும், அவர்களால் இங்கே வெல்ல முடியாது.
அவர்கள் கணக்குத் தப்புக் கணக்காகத்தான் முடியும். தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்ட, வேறுபட்ட ஒரு மண். இந்திய மாநிலங்களில் இருந்து வேறுபட்ட ஒரு மண் என்பதை இந்தத் தேர்தலின் மூலமும் மீண்டும் அவர்கள் உணர்வார்கள்” என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.