ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவர் தன்னை காதலிக்கும் படி மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மாணவர் தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததை மாணவி தன்னுடைய தாயாரிடம் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் பள்ளியில் புகார் செய்ததை தொடர்ந்து அந்த மாணவனை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதிலும், மாணவி பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் வீதியில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது..

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை

இந்நிலையில் மிரட்டலுக்கு பயந்து மாணவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பள்ளிக்கு செல்லாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்கொலைக்கு காரணமான மாணவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சில மாதங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவி ஒருவரை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்தது. அதன் வடு மறைவதற்குள் ஒரு தலை காதலுக்கு மேலும் மாணவி பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.