"திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!" – ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ஜி.கே.வாசனிடம் விருப்பமனுவை வழங்கினர். அதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“தமிழக அரசின் இடைக்கால வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்துள்ளது. இது, தமிழக வாக்காளர்களின் எதிர்காலத்திற்கும், எண்ணத்திற்கு நேர்மாறாக உள்ளது. விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை. தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி மக்கள் மன நிலைக்கு நேர்மாறாக உள்ள கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மாநில சுயாட்சிக்காக சட்டத்தை திருத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

gk vasan

மத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு தி.மு.க சரியான அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசில் நல்ல இலாகாக்களை பெறுவதில்தான் போராடி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பி.ஜே.பி-யுடன் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூட அதை வலியுறுத்தவில்லை. பிரதமர்களிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை.

த.மா.கா-வின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே என் கவனம் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் என் கவனம் உள்ளது. ராஜ்யசபா உறுப்பினர் குறித்து எதுவும் தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. த.மா.கா-வை பொறுத்தவரை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் முதல் பணி. வெற்றி தான் இலக்காக இருக்க வேண்டும். லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி த.மா.கா தான். தி.மு.க அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால் மாநில சுயாட்சி, கவர்னர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு வரிகள் மூலம் சுமையை ஏற்றிய அரசு தி.மு.க அரசு. மக்களை ஏமாற்றிய தி.மு.க-வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள். காங்கிரஸூக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தான். சுக்கு நூறான பொருளை எப்படி ஒட்ட நினைத்தாலும் அது மீண்டும் சுக்கு நூறாக தான் போகும். அது போல தான் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.