தமிழ் சினிமாவில் ‘சூது கவ்வும்’ படத்திற்கு தனி இடமுண்டு. அதற்கு முன் டெரராகக் காட்டிய ஆள் கடத்தல் சூதினை ஜாலி கலாட்டாவாக்கி மனதை கொள்ளை கொண்ட பெருமை ‘சூது கவ்வும்’ படத்திற்கு உண்டு. நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான இப்படத்தின் வசனங்கள் காமெடி அதகளம் செய்திருக்கின்றன.. ”சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்!”, ”இதை இட்லினு சொன்னா, சட்னிகூட நம்பாதுடா!” போன்ற டயலாக்குகள் இப்போதும் மீம்ஸ்களில் உலா வருகின்றன.

இன்று ரீ ரிலீஸ் ஆகியிருக்கும் ‘சூது கவ்வும்’ படத்தின் நாயகியான சஞ்சிதா ஷெட்டியிடம் பேசினோம். இந்த படத்தில் ஹீரோவை ‘மாமா… மாமா…’ என்று கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரித்தவர் சஞ்சிதா ஷெட்டி.
”தமிழ்ல என்னோட மூணாவது படமாக ‘சூது கவ்வும்’ வந்தது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துல இருந்து இயக்குநர் நலன் சார்கிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. என்னோட ரோல் பத்தி சொன்னாங்க. ஆடிஷனுக்காக நான் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தேன். லுக் டெஸ்ட்லேயே நான் தேர்வாகிட்டேன். அவரால தான் இந்தப்படம் எனக்கு கிடைச்சது. இன்னிக்கு நான் தியேட்டர்ல போய் பார்த்தேன். இப்ப உள்ள ஜென் z கிட்ஸ் ரொம்ப ரசிச்சு பார்த்தாங்க. பாபிசிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், ரமேஷ் திலக்னு படத்துல நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் அத்தனை பேருக்குமே நலன் சார் கதாபாத்திரத்துல முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஒவ்வொருத்தரின் கேரக்டருமே தனித்துவமா இருக்கும். ஏன்னா, ஹீரோ, ஹீரோயின்கள் எப்பவுமே ஹைலைட் ஆகிடுவாங்க. மத்த சக நடிகர்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவமான கதாபாத்திரம் ஒரு படத்துல அமையறது மேஜிக் தான். அது ‘சூது கவ்வும்’ல இயல்பாகவே அமைஞ்சிடுச்சு.

நேத்து இந்த படத்தோட ரீயூனியன் நடந்தது. நலன் சார், விஜய்சேதுபதி, கருணாகரன், அசோக்செல்வன், பாபிசிம்ஹா, ரமேஷ்திலக்னு பலரும் இருந்தாங்க. காலேஜ் படிச்சிட்டு அதன் பிறகு 10 வருஷத்துக்கு பிறகு ரீ யூனியன் ஆனா, எப்படி ஒரு ஃபீல் இருக்குமோ அப்படி எல்லோரும் உணர்ந்தோம். ‘சஞ்சிதா எப்பவும் ஃபிட் தான். இப்பவும் அப்படியே இருக்கீங்க’னு எல்லோரும் சொன்னது சந்தோஷமா இருந்தது. ரொம்ப வருஷத்துக்கு பிறகு எல்லோரும் சந்திச்சதால நிறைய பேசினோம். அசோக் செல்வனுடன் ‘பீட்சா2’விலும் நடிச்சிருக்கேன். அருண் பாண்டியன் சாருடன் சேர்த்து அசோக்கையும் சந்திச்சது சந்தோஷம்

இன்னிக்கு விஜய் சாரோட ‘கில்லி’ படமும் ரீ ரிலீஸ் ஆகியிருக்குது. ஒரு டைம்ல ஹிட் ஆன படங்கள் இப்ப மறுபடியும் ரீ ரிலீஸ் ஆகுறது நல்ல விஷயம் தான். இப்ப ஓடிடி வந்த பிறகு ஒரு சிலர் வீடுகள்ல ஹோம் தியேட்டர்ல படங்களை பார்க்குறாங்க. இந்த தலைமுறையினர் மொபைல் போன்ல பார்க்குறாங்க. ஆனாலும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை அவங்க மிஸ் பண்ணலாம். இன்னிக்கு நான் ‘சூது கவ்வும்’ படத்தை தியேட்டர்ல பார்க்கும் போது தியேட்டர் ஹவுஸ் ஃபுல்லா இருந்தது. ஜனங்களோடு சேர்ந்து படம் பார்க்கும் போது அந்த உற்சாகமே தனிதான். ரீரிலீஸ் படங்களைப் பொறுத்தவரையில் அந்தப் படம் வெளியான வருஷத்துல பெரிய டிரெண்ட் ஆகியிருக்கும். சூப்பர் ஹிட் , வசூல் எல்லாம் கிடைச்சிருக்கும். அதுல நடிச்சவங்க இப்ப ஸ்டார்கள் ஆகியிருப்பாங்க. பெயரும், புகழும் அமைஞ்சிருக்கும். அப்படி படங்களை இப்ப ரீரிலிஸ் பண்றதன் ஒரே நோக்கம், இந்த தலைமுறையினர் பார்த்து ரசிக்கணும் என்பதற்காகத்தான். பத்து வருஷத்துக்கு முன்னர் வெளியான படங்களை இப்ப மறுபடியும் பார்க்கும் போது ஃப்ரெஷ்ஷான ஒரு புதுப்படத்தை பார்க்கும் உணர்வை நமக்கும் கொடுக்கும். இப்படி ஒரு கலகலப்பான ஒரு ஜானரும் அவங்களையும் கவர்ந்திழுக்கும்.” என்கிற சஞ்சிதா ஷெட்டி, இப்போது அமீர், சத்யா (ஆர்யா தம்பி) நடிக்கும் ‘மாயவலை’ மற்றும் பிரபுதேவாவுடன் ஒரு அனிமேஷன் படம் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.