`முதல்வர் கலந்துகிடுவார்னு தெரிஞ்சிருந்தா கல்யாணத்தை பெரிசா பண்ணியிருப்பேன்!' – நடிகர் டெலிபோன் ராஜ்

சென்னையில் நேற்று நடந்த நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தன் திருமணத்தில் சினிமா, டிவி பிரபலங்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொள்வாதாக இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் மண வீட்டார் தரப்பிலிருந்து மணமக்களை நேரில் முதல்வரிடம் அழைத்துப் போய் ஆசி வாங்குவதென முடிவெடுக்கப் பட்டதால் முதல்வர் கலந்து கொள்லவில்லை என்கிறார்கள்.

ராஜிடம் பேசினோம், “பையனுக்கு திவ்யாங்கிற பொண்ணோட திருமணம் நல்லபடியா நடந்து முடிஞ்சது. நடிகர் கிங்ஸ்லி, அப்புக்குட்டி உள்ளிட்ட சினிமா நண்பர்கள், டிவியில இருந்து என் நண்பர்கள் பட்டாளம், எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி குடும்பம்னு நிறையப் பேர் கலந்துகிட்டாங்க. கூப்பிட மறந்த சில நண்பர்களே கேள்விப்பட்டு வந்து கலந்துகிட்டாங்க.

எல்லாரையும் கூப்பிட்டு இன்னும் பெரிசா நடத்தியிருக்கலாம். ஆன என் வசதின்னு ஒரு விஷயம் இருக்கில்லையா, என்னால முடிஞ்ச அளவுல சின்னதா ஒரு இடத்துல வச்சேன்.

அதனாலேயே வர்றேன்னு சொன்ன முதலமைச்சரை வரவேண்டாம்னு சொல்ல வேண்டிய நிலை உருவாகிடுச்சு. சி.எம். ஆபீஸ்ல இருந்து வர்றதாச் சொல்லி தகவல் வந்தது.

எனக்கு நடிகர் கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல அவர் கலந்துகிட்ட போது கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு பயம். ஏன்னா, கல்யாணம் நடந்த இடம் ரொம்பச் சின்ன இடம். முதல்வர் கலந்துகிடுவார்னு உறுதியா தெரிஞ்சிருந்தா கல்யாணத்தைப் பெரிசா பண்ணியிருப்பேன். அதனாலேயே, பூச்சி முருகன் அண்ணன்கிட்டச் சொல்லி மணமக்களை கலயாணம் முடிஞ்சதும் முதல்வர் கிட்டக் கூட்டிட்டுப் போய் ஆசி வாங்கிடலாமானு கேட்டேன்.

சாதாரண ஒரு காமெடி நடிகனான என் வீட்டு விசேஷத்துக்கு முதல்வர் வர்றதுன்னா அது என்ன வாழ்நாள் சாதனை. அப்படியொரு வாய்ப்பு எனக்கு வந்து திரும்பிடுச்சு. அவர் வரத் தயாரா இருந்து அதைத் தவறவிட்டதை நினைச்சு வருந்தறதா அல்லது என் வீட்டுக்கும் வர்றேனு சொன்னாரே அதை நினைச்சு சந்தோஷப் பட்டுகிடறதானு தெரியாத ஒரு சூழல்ல‌ தவிச்சேன்.

poochi murugan

சூழலைப் புரிஞ்சுகிட்ட அவர் சரின்னு சொல்ல, சி.எம். ஆபிஸ்க்கு அந்த தகவலைச் சொன்னோம். பிறகு பூச்சி முருகன் அண்ணனே தாலி எடுத்துக் கொடுக்க கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சது. சீக்கிரத்துலயே மணமக்களை முதல்வர் கிட்டக் கூட்டிட்டுப் போகணும்” என்றவரிடம்,

திருமணம், காதல் திருமணமா அல்லது நீங்கள் பார்த்து உறுதி செய்த பெண்னா எனக் கேட்டோம்.

”ரெண்டும்தான். திவ்யாவை ஸ்கூல் நாள்லயே காதலிக்கத் தொடங்கியிருக்கான் சித்தார்த். ரெண்டு பேரும் ஒண்ணாதான் காலேஜும் படிச்சாங்க. தொடர்ந்து அவன் வேலை பார்த்த தனியார் நிறுவனத்திலேயே அந்தப் பொண்ணுக்கும் வேலை வாங்கித் தந்திருக்கான். கடைசியில ரெண்டு பேரும் காதலை வீட்டுல சொன்னாங்க. எனக்கு பிரச்னையில்லனு சொல்லிட்டேன். சாதி, மதம்னு எந்த விஷயத்தையும் நான் பார்க்குறதில்லை.

ஆனா அவங்க அம்மாவுக்கு சம்மதமில்லை.

நான் ‘உன் அம்மாவைச் சமாதானப்படுத்தி முடிக்கப் பாரு’னு தெளிவா சொல்லிட்டேன் கெஞ்சி, அடம்பிடிச்சு அஞ்சாறு வருஷம் போராடியிருப்பான். ஒருவழியா கடைசியில அவங்க அம்மா சம்மதம் கிடைக்க, இப்ப சந்தோஷமா கல்யாணத்தை முடிச்சிட்டோம். இதுக்கு முன்னாடி என் மகளுக்கும் லவ் மேரேஜ்தான் நடந்தது. பிள்ளைங்க சந்தோஷம்தான் முக்கியம்னு நாங்க நினைக்க, நாங்க இல்லாம கல்யாணம் செய்துக்கக் கூடாதுங்கிறதுல அவங்க உறுதியா இருந்தாங்க” என நெகிழ்கிறார் ராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.