ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் அவர்களது மனைவியிடம் இருந்து பிரிந்து வருவது அதிகரித்து உள்ளது. தற்போது அந்த வரிசையில் பிரபல ஐபிஎல் வீரர் ராகுல் சஹரும் இணைந்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
ராகுல் சஹார் விவாகரத்து
இது குறித்து ராகு சாஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, நான் என் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். என்னை பற்றியும், எனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நான் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே இந்த திருமணம் நடந்துவிட்டது. இந்த திருமண வாழ்க்கை நான் சற்றும் எதிர்பாராத பல பாடங்களை கற்று கொடுத்தது. கடந்த 15 மாதங்களாக நீதிமன்றங்களில் அலைந்தது பொறுமையையும், மன உறுதியையும் கற்று கொடுத்தது.
இது முடிவு அல்ல.. தொடக்கம்
சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு பிறகு இன்று எனது வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவை நான் மிகவும் தெளிவாக எடுத்துள்ளேன். சில உறவுகள் நம் வாழ்க்கை முழுவதும் நீடிப்பதில்லை. அவை நமக்கு சில பாடங்களை கற்று கொடுக்க வருகின்றன என கூறி உள்ளார்.
மேலும், இது முடிவு அல்ல. இதுவே தொடக்கம். வரும் காலங்களில் நான் எடுக்கும் முடிவுகள் சுயமரியாதை மற்றும் எனது அமைதியை சார்ந்தே இருக்கும். நான் எந்த ஒரு கசப்பான உணர்வுகளையும் எடுத்து செல்ல விரும்பவில்லை. பாடங்களையும் கண்ணியத்தையும் மீண்டும் தொடங்குவதற்கான தைரியத்தை மட்டுமே எடுத்து செல்ல விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
காதல் திருமணம்
ராகுல் சாஹர் தனது 22 வயதில் இஷானி ஜோஹரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதாவது, 2019ல் நிச்சயம் செய்து மார்ச் 9, 2022ல் கோவாவில் வைத்து திருமணம் செய்துக்கொண்டார். 3 ஆண்டுகளுக்கு மேல் கணவன் மனைவியாக வாழ்ந்த இவர்கள் தற்போது பரஸ்பரம் பேசி விவாகரத்து பெற்றுள்ளனர்.
இந்திய அணிக்காக 2019ல் அறிமுகம்
சுழற்பந்து வீச்சாளரான ராகு சாஹர் 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் 6 டி20 போட்டிகளிலும் ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். அதில் மொத்தமாக 10 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த பயணம் 2021ஆம் ஆண்டு வரை தொடர்ந்த நிலையில், அதன்பின் அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல்லில் ராகுல் சாஹர்
ஐபிஎல்லில் 2017ஆம் ஆண்டு ராகுல் சஹார் அறிமுகமானார். முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். அதன்பின் 2022ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த 2025ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நிலையில், நடந்து முடிந்த மினி ஏலத்தில் ராகுல் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 5.2 கோடிக்கு வாங்கி உள்ளது.
இதுவரை ஐபிஎல்லில் 79 போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்களை எடுத்துள்ளார். வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ராகுல் சஹார் காத்திருக்கிறார். அவருக்கு சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
R Balaji