"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" – சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், “குருவாயூர் தேவசம் போர்டின் தலைவராகி குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. அதைத்தாண்டி நான் வேறு எதுவும் விரும்பவில்லை. இப்போது நான் இருக்கும் நிலை எனது ஆசை அல்ல. இதைச்சொல்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். இல்லையென்றால், வட இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் ‘சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குருவாயூர் தேவசம் போர்டு தலைவராகப் போய்விட்டார்’ என்று கிளப்பிவிட்டுவிடுவார்கள். ஒருவிதத்திலும் வாழமுடியாத நிலை ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பெண்கள் இருக்கிறார்கள். அது என் பாட்டியிடம் இருந்து தொடங்குகிறது. என் பாட்டி சுவையான மற்றும் சத்தான உணவை சமைத்துக் கொடுத்தார். பின்னர் அதை என் அம்மா ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு என் சக்தியாக மனைவி ராதிகா உள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி

பிள்ளைகளை வளர்ப்பதில் என் மனைவி ராதிகா முக்கிய பங்குவகித்தார். அதை எல்லாம் நான் முக்கிய விஷயமாக பார்க்கிறேன். என் வருமான கணக்குகளை பார்த்தால் என் மனைவிக்கு நான் அளிக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவரும். எனக்கு ஒரு பிளாட் இருக்கிறது என்றால், அதில் ஒரு தளம் என் பெயரிலும், அடுத்த தளம் என் மனைவி பெயரிலும் இருக்கும். எனது சொத்துக்களில் பாதி என் மனைவி பெயரில் இருக்கும். என் பெயரில் ஒரு சொத்து இருந்தால், என் மனைவி ராதிகா பெயரில் இரண்டு சொத்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்.

சுரேஷ்கோபி

மத்திய அமைச்சர் பதவியைத் தவிர, மற்ற எல்லா ஆவணங்களிலும் என் மனைவிக்கு சமமான பங்கு அளிக்கும் வகையில் நான் ஒரு தெளிவான கோட்டை ஏற்படுத்தி உள்ளேன். அந்தக் கோடு என் இதயத்திலும் உள்ளது. அரசியல் ஆர்வலராக மாறுவதற்கான தகுதி நேர்மையாகும். இந்தத் தகுதி நமக்கு இருந்தால், நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.