தற்போது 2026 டி20 உலக கோப்பை நடைபெற்று வரும் நிலையில், மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை இல்லாத பல்வேறு மாற்றங்களை இந்த சீசனுக்காக மேற்கொண்டுள்ளது. நீண்ட ஆண்டுகளாக சிஎஸ்கேவில் விளையாடிய ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல் அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் தோனி ஐபிஎல் 2026ல் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source

சிஎஸ்கேவில் அதிரடி மாற்றங்கள்
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் பத்து போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதற்கு அணியில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ஏலத்தில் வாங்கிய வீரர்களின் சொதப்பல்கள் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இது குறித்து பேசிய காசி விஸ்வநாதன், “கடந்த சீசனில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது உண்மைதான். எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே நம்பி இருக்கும் நாங்கள், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இளம் வீரர்களை மையப்படுத்தி அணியை மறுக்கட்டமைப்பு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் கொண்டு வர காரணம்!
ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, ரூபாய் 18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சிஎஸ்கே நிர்வாகம் ட்ரேட் செய்துள்ளது. தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிஎஸ்கே அணிக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் அவசியம் தேவை. மேலும் அது டாப் ஆர்டரில் இருந்தால் கூடுதல் சிறப்பு. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் சஞ்சு சாம்சன் போன்ற வீரருக்கு பேட்டிங் செய்ய சிறப்பான ஒன்றாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முக்கிய முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

தோனியின் எதிர்காலம்
சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் ஆகவும் செயல்பட முடியும் என்பதால் இந்த சீசனுடன் தோனியின் தேவை முடிவடையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சீசனில் யார் விக்கெட் கீப்பிங் செய்வார்கள் என்பது குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் வரவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய காசி விஸ்வநாதன், “இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி நிச்சயம் விளையாடுவார். சென்னை அணி உடனான அவரது உறவு என்றென்றும் தொடரும். அவர் ஓய்வு பெற்ற பிறகும் சென்னை அணியுடன் அவரது பயணம் வேறு ஒரு வழியில் நீட்டிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் அணிக்கு வந்துள்ளதால் இந்த ஆண்டு தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் அணிக்கு வந்ததால் அவருக்கு கேப்டன்சி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது, ஆனாலும் ருதுராஜ் கைகுவாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தொடர்வார் என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
About the Author
RK Spark