முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு தீவிரம் காட்டவில்லை – பாஜக குற்றச்சாட்டு.!

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு தீவிரம் காட்டவில்லை என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கழுவும் மீனில்  நழுவும் மீனாக சட்டசபையில் பதிலளிக்கிறார் நீர்வளத்துறை  அமைச்சர் திரு.துரைமுருகன். சட்டப்பேரவையில் முல்லைபெரியாறு அணை குறித்து குரல் எழுப்ப வேண்டுமென்று பாஜக விவசாய அணி தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைத்து வந்தது.

இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து எதிர்க்கட்சித்தலைவர் திரு.O.பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர் திரு.செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.வேல்முருகன், திரு.தளி ராமச்சந்திரன், திரு.நாகை மாலி உள்ளிட்டோர் குரல் எழுப்பினர்.

குறிப்பாக பாமக தலைவர் திரு.G.K.மணி பேசுகையில், அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால் அமைச்சர் திரு.துரைமுருகன் பதிலளிக்கையில், கண்காணிப்புக் குழுவிற்கு அதிகாரமுள்ளது. அதை ஏற்போமா? இல்லையா? என்ற கருத்தை எதிர்பார்த்தேன்.

அணை பாதுகாப்பு சட்டத்தின்படி, அணையை பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஆனால் அச்சட்டம் வருவதற்கு இன்னும் ஓராண்டு காலமாகும்.

எனவே முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை என்றார். ஆனால்  2014-ம் ஆண்டின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பேபி அணையை வலுப்படுத்தி 152 அடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது.

எனவே ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க சட்டசபையில் நிதிஒதுக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை தொட்டால் கேரள அரசுடன் தன் உறவு கெட்டுவிடும். வரும்காலத்தில் டெல்லி பதவிக்கான திட்டமிடலுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் தீவிரம் காட்ட மறுக்கிறது.

திமுகவின் இந்நிலை தொடர்ந்தால் விவசாயிகளின் நலன் காக்க, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீராதாரம் காக்க பாஜகவின் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.