விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து(27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், திருமணம் முடிந்து கொத்தளமுத்து-காயத்ரி தம்பதியினர் இருவரும் சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் பெற்றோருடன் வசித்துவந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தத் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், வீட்டிலுள்ள ஓர் அறையில் இரவு தூங்கச்சென்றிருக்கிறார் காயத்ரி. ஆனால், காலை விடிந்து வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. குழந்தையை கவனிப்பதால் அசந்து தூங்கியிருப்பார் என வீட்டில் உள்ளவர்களும் அவரை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டதாகக் கூறுகின்றனர். நேற்று மாலை வரையிலும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், காயத்ரியின் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அறையினுள் காயத்ரி, அவரின் 4 மாத ஆண் குழந்தையுடன் உயிரிழந்து கிடந்திருக்கிறார். அதைக் கண்டு அவர் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து வெம்பக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், இறந்துகிடந்த தாய், குழந்தையின் உடல்களைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆன நிலையில், 4 மாத குழந்தையுடன் காயத்ரி தற்கொலை செய்துகொண்டது ஏன்… இது தற்கொலையா… அல்லது கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் கடிதம் ஒன்று சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதைக்கொண்டு போலீஸார் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். அதேபோல, சம்பவ நாள் முதலே காயத்ரியின் கணவர் கொத்தாளமுத்து வீட்டில் இல்லாததால் அவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.