முல்லைப்பெரியாறு கண்காணிப்பு குழு தமிழக, கேரள அரசுகள் ஆலோசனை| Dinamalar

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக்குழுவின், 15வது ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.மத்திய நீர்வளக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் குல்ஷன் ராஜ் தலைமை வகித்தார்.தமிழக அரசின் சார்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேரள அரசின் சார்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜோஸ், தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர்பங்கேற்றனர்.இவர்களைத் தவிர, மத்திய நதிநீர் ஆணையத்தின் இயக்குனர்கள் சரப்ஜித்சிங் பக்சி, சமீர் கே.ஆர்.சுக்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

தற்போது, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, தண்ணீர் தேக்குதல், கூடுதல் பராமரிப்பு பணிகள் ஆகியவை தொடர்பாக, தமிழகம், கேரள அரசுகளுக்கு இடையே சிக்கல்கள் இருந்து வருகின்றன.சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்ட இக்குழுவின் உறுப்பினர்கள், கடந்த மாதம் அணையை நேரடியாக பார்வையிட்டு பல்வேறு விபரங்களை அறிந்து கொண்டனர்.

குறிப்பாக, பேபி அணை, பிரதான அணை, மதகுப் பகுதிகள், சுரங்கப்பகுதிகள் ஆகியவை குறித்த தகவல்களை அடிப்படையாக வைத்து, இந்த ஆலோசனை நடைபெற்றது.அணையிலிருந்து வெளியேறும் கசிவுநீர் அளவு, கோடை மற்றும் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்குவது மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

– நமது டில்லி நிருபர் –

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.