டெல்லி: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்தியாவில் முதல்முறையாக என்ற பெருமையுடன், உலகை வியக்க வைக்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. செஸ் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடந்தாலும் தொடக்க விழா, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்கவர் நடனங்களுடன் இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கிறார். மேலும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள், சர்வதேச, இந்திய செஸ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னையில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் நேற்று பதிவிட்டுள்ள அவர்,’ நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே இது ஒரு சிறப்பான போட்டியாகும்.’ என கூறியுள்ளார்.
