
புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம்
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'புஷ்பா'. அப்படம் தமிழகத்திலும் நல்ல வசூலைப் பெற்றது. தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்தாலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் இங்கும் ஹிட் ஆகின.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, இரண்டாம் பாகத்திற்கான பாடல் இசைக்கோர்ப்பு வேலைகளை செக் குடியரசில் உள்ள பராகுவே நகரில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், பாடலாசிரியர் சந்திரபோஸ் அதற்கான ஆலோசனைகளில் உள்ளனர். இது குறித்த தகவலை இயக்குனர் சுகுமாரின் மனைவி தபிதா வெளியிட்டுள்ளார்.