சித்தராமையாவுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு – கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த வாரம் குடகு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வீரசாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்தை கண்டித்து பா.ஜனதாவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

அந்த நேரத்தில் போராட்டத்தில் பங்கேற்று இருந்த ஒருவர் சித்தராமையாவின் கார் மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சித்தராமையாவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை கர்நாடக அரசு வழங்கியுள்ளது. அவருக்கு எப்போதும் 21 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும்போது உள்ளூர் போலீசார் மூலம் இன்னும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

சித்தராமையா மட்டுமின்றி முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, எடியூரப்பா உள்ளிட்டோருக்கும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.