காஞ்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 26-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

23-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 25, 26-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.